வியாழன், 27 மே, 2021

அந்த வாத்தியாரை செவுளில் அறையணும்

 

PSBB School Teacher Sexual Harraasment Case Serila Actor Arun Condeming Video : சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியான பத்ம சேஷாத்ரி பால பவனில், வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதன் பேரில், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 சட்டங்கள் பாய்ந்துள்ளது. ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வரும் ஜூன் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் அறுவறுக்கத் தக்க இந்த செயலுக்கு, கல்வியாளர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ‘பூவே உனக்காக’ சீரியலில் செல்வம் ரோலில் நடித்து வரும் சின்னத்திரை பிரபலம் ஒருவர், ஆசிரியர் ராஜகோபாலனின் செயலுக்கு தனது கண்டனங்களை உணர்ச்சிப் பொங்க வெளிபடுத்தி உள்ளார்

சன் டிவியில் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ஒளிபரப்பான ‘இளவரசி’ சீரியலில் ஸ்வரூபன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் அருண் குமார் ராஜன். அதன் பிறகாக சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு, அழகி, வாணி ராணி போன்ற சீரியல்களிலும் நடித்து பிரபலமடைந்துள்ளார். தற்போது, சன் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலில் சபரி ரோலில் நடித்து வருகிறார். மேலும், தற்போது சன் டிவியில் அறிமுகமாகி உள்ள ‘பூவே உனக்காக’சீரியலிலும் செல்வம் ரோலில் நடித்து பிஸியாகவே இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அருண் குமார் ராஜன் தற்போது தமிழகத்தை உலுக்கி உள்ள பிரச்னையான மாணவிகள் மீது பள்ளி ஆசிரியரின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கோபம் பொங்கிய நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘ பி.எஸ்.பி.பி பள்ளி விவகாரத்தில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலனின் பெயரை சொல்வதற்கே கூச்சமும் அசிங்கமாகவும் இருக்கிறது. அவனை நினைக்கும் போதே என் வாயில் வண்டை வண்டையாக வருகிறது. இப்படியான பள்ளிகளில் அட்மிஷன் கிடைப்பது கடினம் என நினைத்து, நாம் பலரிடம் சிபாரிசு பெற்று இப்படியான மதிப்புகள் நிறைந்த பள்ளியாக சொல்லிக் கொள்ளும் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முற்படுகிறோம். ஆனால், 5 வருடமாக ஒரு ஆசிரியர் மாணவிகளை டார்ச்சர் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளான். பள்ளி நிர்வாகன், இவன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்கிறது என்றால், இவனுடன் மேலும் சிலர் சேர்ந்து இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

அவனை அழைத்து செவுளில் அறைந்தால் வேறு யாரும் இப்படியான வேலைகளை செய்ய பயப்படுவார்கள் அல்லவா? இவர்களுக்கு தக்க தண்டனையை வழங்க நீதியை நிலைநாட்ட முடியாத நாமெல்லாம் நாட்டின் குடிமகன்களா? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவியின் இளம் பருவ நிலை, மனதில் கொள்ளப்பட வேண்டியது. அவருடைய வாழ்க்கையே திசை மாறி போய் விடும் அபாயம் இது போன்ற சிக்கல்களால் உருவாகிறது. அவருக்கு எப்படியான பாதுகாப்பான சூழலை நாம் வழங்கி இருக்கிறோம்? பள்ளிகளைப் பொறுத்தவரை எவ்வளவு கட்டணங்களை வசூலிக்கிறார்கள்?

மாணவர்கள் சிறு தவறு செய்தால் கூட, பெற்றோரை அழைத்து உடனடியாக விசாரிக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய தவறு நடக்கும் போது ஆசிரியரை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மட்டும் ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது. இது போன்ற பாலியல் அத்துமீறல்களை பள்ளி நிர்வாகத்தால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை மற்றும் தடுத்துநிறுத்த முடியவில்லை. பின்னர் எதற்காக இப்படியான கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டும்.அந்த குழந்தைகளுக்கோ அவர்களின் பெற்றோருக்கோ எந்த மாதிரியான மனநிலை இருக்கும். அவர்களுக்கு இந்த சமுதாயத்தை பார்க்கும்போது, எந்த ஆண்மகன் மீதேனும் நம்பிக்கை வருமா? என இந்த பிரச்னையில் சாதாரண குடிமகனுக்கு எழும் கேள்விகளையும் ஆதங்கத்தையும் தனது வீடியோவில் வெளிபடுத்தி உள்ளார்.

அருணின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அருணை போல செய்வதறியாது கேள்விகளையும் ஆதங்கத்தையும் வெளிபடுத்தும் பல சாமானிய மக்களும் சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/entertainment/psbb-school-teacher-rajagopalan-sexual-harrasment-poove-unakkaga-serial-actor-arun-kumar-rajan-condems-videos-307504/