புதன், 26 மே, 2021

சி.எம் காப்பீடு : தனியார் மருத்துவமனை சிகிச்சை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

 25.5.2021 முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் சேராதவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக என்ன திட்டம் உள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து வருகிறது.  இதனால் கொரோனா தொற்று தாக்கம் கட்டுக்குள் வரும் வரை தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.ஐ.நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தமிழக அரசுத் தரப்பில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது, ஆனால் இந்த சலுகையை அந்த திட்டத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் மற்ற நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை  உள்ளது.

இது குறித்து அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் இதுவரை மொத்தம் 1 கோடியே 58 லட்சம் பேர் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளதாகவும், சில தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சதவீதப் படுக்கைகள் ஒதுக்கி இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது என்று அது தொடர்பான முழு விவரங்களைத் தாக்கல் செய்வதாகவும் அரசு தெரிவித்தார்.

இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்றவர்கள், குழு காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் அதிகம் சேர்ந்துள்ளதாகவும், இதில் சேராதவர்களும் மருத்துவமனைகளில் படுக்கை பெற இயலாதவர்களும், தனியார் மருத்துவமனைகளில் எவ்வாறு சிகிச்சை பெற முடியும் என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடடுள்ள நிலையில், இந்த வழக்கை மே 31 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-insurance-scheme-treated-private-hospital-corona-patient-question-from-high-court-306966/