ஞாயிறு, 30 மே, 2021

பெறாத விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்த வைரமுத்து: நடந்தது என்ன?

 

இந்திய முன்னணி கவிஞரான வைரமுத்து பதமபூஷன் விருதுஉட்பட பல விருதுகளை வாங்கியுள்ளார். இந்நிலையில், கேரளாவின் புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியரும், இடதுசாரி சிந்தனையாளருமான ஓஎன்வி குரூப்பு அவர்களின் பெயரில் செயல்படும் அமைப்பு மூலம் ஆண்டுதோறும் இலக்கிய விருது வழங்கி வருகிறது. இதுவரை கேரளாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த விருது தற்போது முதல்வமுறையாக இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துக்குவழங்கப்படுவதாக அறிவித்த்து.

இது தொடர்பாக கடந்த மே 26-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்றுமுதல் இந்த அறிவிப்பு குறித்து பெரும் சர்ச்சை எழுந்து வருகிறது. தமிழ் திரையுலகை சேர்ந்த பாடக சின்மயி முதல் கேரளாவின் முன்னணி நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்துவுக்கு விருது வழங்குவதாக என்று சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு எழுந்துள்ள நிலையில், வைரமுத்துக்கு கொடுப்பதாக கூறிய விருது குறித்து மறுசீலனை செய்யப்போகிறோம் என ஓஎன்வி அமைப்பு அறிவித்தது.

ஆனால் தற்போது இந்த விருதை திருப்பி அளிப்பதாக வைரமுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன். ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன்.

இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன். அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.

ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்.

தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும். இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி’’ என்று என கூறியுள்ளார்.

ஆனால் இந்த விருது இவருக்கு அளிக்கப்படாத நிலையில், அந்த விருதை திருப்பி அளிப்பதாகவும், பரிசுத்தொகையான3 லட்சத்தை கேரளா நிவாரண நிதிக்கு அளிப்பதாக வைரமுத்து கூறியிருப்பது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

source https://tamil.indianexpress.com/entertainment/tamil-kanignar-viramuthu-say-about-onv-award-to-twitter-video-308492/