புதன், 26 மே, 2021

நடமாடும் காய்கறி வண்டிகள் தொடர்பான சந்தேகம் மற்றும் புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

 25/5/2021 தமிழகத்தில் நடமாடும் காய்கறி கடைகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் நடமாடும் வண்டிகளில் வைத்து விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் தற்போது நடமாடும் காய்கறி வண்டிகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்கள் அளிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார். இதில் பொதுமக்கள் தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும், பிரச்சனைகள் மற்றும் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்கவும், 044 45680200, 9499932899 தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார். காய்கறி கடைகள் மற்றும் விலை குறித்து வரும் புகார்களை விசாரிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிக விலைக்கு காய்கறி விற்று வருகிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு காய்கறி எளிதில் கிடைக்கும் வகையிலும் இந்த நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் பெரிய அளவில் உதவும். சென்னை மாநகரில் மட்டும் 5,000 நடமாடும் காய்கறி வாகனங்கள் காய்கறி விற்பனையில் ஈடுபடும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/mobile-vegetable-shops-in-chennai-covid-lock-down-season-307019/