வியாழன், 21 செப்டம்பர், 2017

​வேற்றுமையை விதைக்காதீர்கள் என மம்தா பானர்ஜி அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்! September 20, 2017

​வேற்றுமையை விதைக்காதீர்கள் என மம்தா பானர்ஜி அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!


துர்கா சிலை கரைப்பு விவகாரத்தில் பாரபட்சமாக நடந்துகொண்டதாக மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு முஸ்லீம்களின் பண்டிகையான முஹரமும், இந்துக்களின் பண்டிகையுமான துர்கா பூஜாவும் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ஒரே நாளில் வர இருக்கிறது.

இதன் காரணமாக மதம் சார்ந்த மோதல்கள் தலை தூக்கும் என்ற காரணத்திற்காக துர்கா சிலைகளை கரைப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரண்டு நாட்களுக்கு தடை விதித்தது மம்தா பானர்ஜி அரசு.

அரசின் இந்த முடிவு இந்து மதத்தினரின் சம்பிரதாயத்திற்கு தடை போடுவதாகவும், முஸ்லீம் மதத்தினரின் வாக்குவங்கியை ஈர்ப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது.  

துர்கா சிலை கரைப்பு விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை முன்வைத்ததோடு கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் இரண்டு மதத்தினருக்கும் இடையே எவ்வாறு மோதல்கள் ஏற்படும் என்றும், இரண்டு மதத்தினரையும் இடையே எதற்காக வகுப்புவாத வேறுபாடுகளை உருவாக்குகிறீர்கள் என்று அரசுக்கு கேள்வியை முன்வைத்த நீதிபதிகள், இரண்டு மதத்தினரும் நல்லிணக்கத்தோடு வாழட்டும், அவர்களுக்கு இடையே வேற்றுமையை விதைக்காதீர்கள் என மம்தா பானர்ஜி அரசை கடுமையாக சாடினர்.