வெள்ளி, 29 செப்டம்பர், 2017

​நொய்யல் ஆற்றைத் தொடர்ந்து ஓசூர் கெலரப்பள்ளி அணை தண்ணீரில் பொங்கும் ரசாயன நுரை..! September 29, 2017

​நொய்யல் ஆற்றைத் தொடர்ந்து ஓசூர் கெலரப்பள்ளி அணை தண்ணீரில் பொங்கும் ரசாயன நுரை..!


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், நீருடன் அதிக அளவு நுரையும் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

44.28 அடி கொண்ட கெலவரப்பள்ளி அணையில் தற்போது 43.70 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு கெலவரப்பள்ளி அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்படுகிறது. 

கெலவரப்பள்ளி அணைக்கு அருகில் உள்ள தட்டிகானப்பள்ளி மற்றும் பாத்தகோட்டா தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

வெள்ள நீரில் ரசாயன நுரை சேர்ந்தே வருவதால், தரைப்பாலம் அமைந்துள்ள பகுதிகளில் மலைபோல் நுரை குவிந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ரசாயன நுரையை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து பாயும் தென் பெண்ணை ஆற்றின் மூலம் அணைக்கு தண்ணீர் வருவதால், வழியில் உள்ள ரசாயன ஆலைகள் தங்கள் கழிவுகளை ஆற்றில் கலக்கவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, ரசாயன நுரை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.