வியாழன், 28 செப்டம்பர், 2017

தொடர் விடுமுறை எதிரொலி: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் September 28, 2017




தொடர் விடுமுறை காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

விஜயதசமி, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி என நாளை முதல் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதுபோன்ற காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பெரிய அய்யா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 

பின்னர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த, துணை ஆணையர் ஈஸ்வரன் போக்குவரத்து நெரிசல் தவிர்பதற்காக போக்குவரத்து காவல்துறையின் துணை ஆணையர்கள் உட்பட 200 பேர் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் கோயம்பேடு எதிரே உள்ள ஜெயின் பூங்கா மற்றும் சைதாப்பேட்டையிலிருந்தும் கூடுதலாக பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இன்று 900 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.