வெள்ளி, 29 செப்டம்பர், 2017

பிரீமியம் ரயில்களில் விரைவில் கட்டணக் குறைப்பு? September 29, 2017

​பிரீமியம் ரயில்களில் விரைவில் கட்டணக் குறைப்பு?


தேவையைப் பொறுத்துக் கட்டணத்தை உயர்த்தும் நெகிழ்வுக் கட்டண முறையை மாற்றுவது குறித்து ரயில்வே துறை பரிசீலித்து வருகிறது. 

ராஜதானி, சதாப்தி, துரந்தோ ஆகிய பிரீமியம் ரயில்களிலும், சிறப்பு ரயில்களிலும் முதல் 10% இடங்களுக்கு வழக்கமான கட்டணமும் அதன்பின் ஒவ்வொரு 10 விழுக்காடு இடங்களுக்கும் தேவையைப் பொறுத்து 50% கூடுதல் கட்டணமும் விதிக்கப்பட்டு வருகிறது. 

நெகிழ்வுக் கட்டணம் எனப் பொருள்படும் இந்த Flexifare முறை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதனால் செப்டம்பரில் இருந்து ஜூன் மாதம் வரையுள்ள காலகட்டத்தில் மட்டும் ரயில்வே துறைக்கு வழக்கத்தைவிட அதிகமாக 540கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. 

எனினும் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், இதனால் ரயில்களில் இடங்கள் பெருமளவுக்குக் காலியாகக் கிடப்பதாகவும் ரயில்வே அமைச்சரிடம் ஏராளமான பயணிகள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்துப் பயணிகளுக்குப் பாதிப்பில்லாமல் இந்த நெகிழ்வுக் கட்டணமுறையை மாற்றியமைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.