ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

குறைந்த விலையில் நிலம் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் மோசடி! September 24, 2017

​குறைந்த விலையில் நிலம் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் மோசடி!


குறைந்த விலையில் நிலம் தருவதாகக் கூறி, கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக, சென்னை தண்டையார் பேட்டையில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டையார்பேட்டை நேதாஜி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் L.R.உடையார். இவர், அதே பகுதியில், அரசு அங்கீகாரம் பெற்ற, தனியார் நடுநிலைப்பள்ளியை நடத்தி வந்தார். 

இவர், எழில் நகர் நலச்சங்கம் என்ற பெயரில், குறைந்த விலையில் நிலம் தருவதாகக்கூறி, கொருக்குப்பேட்டை, நேதாஜி நகர், கலைஞர் நகர், கொடுங்கையூர், எழில் நகர் உள்ளிட்ட பகுதி மக்களிடம், 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

1,000-க்கும் மேற்பட்டோர், நிலம் வாங்க பணம் கட்டியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு  L.R.உடையார் இறந்து விட்டார்.  

பணம் கட்டியவர்களுக்கு நிலமும் தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.