வியாழன், 28 செப்டம்பர், 2017

மேட்டூர் அணைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு 41,000 கனஅடி நீர்வரத்து..! September 28, 2017

​மேட்டூர் அணைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு 41,000 கனஅடி நீர்வரத்து..!


2 ஆண்டுகளுக்கு பிறகு, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 41,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நீடிக்கும் கனமழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

நேற்றைய தினம் 21,648 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 33,569 கன அடியாக உயர்ந்தது. 

அதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 41 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையின் நீர்மட்டமும் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 87 அடியை தாண்டியுள்ளது. அணைக்கு தொடர்ந்து அதிகளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், இன்றிரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூரிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது நீர்இருப்பு 49.39 டி.எம்.சி ஆக உள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை:

காவிரியாற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 3 மணி நேரத்தில் 11 ஆயிரம் கனஅடி அதிகரித்துள்ளது. 

இன்று காலை 10 மணிக்கு நீர்வரத்து 54 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரியாற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.