சனி, 30 செப்டம்பர், 2017

மத்தியில் ஆள்பவர்கள் பிரச்னையை ஒத்துக்கொள்ளாமல் தங்களை தாங்களே புகழ்ந்துகொள்கிறார்கள் - யஷ்வந்த் சின்ஹா September 30, 2017

மத்திய பாஜக அரசின் பொருளாதாரத் தோல்விகள் பற்றியும், பண மதிப்பிழப்பு விவகாரம், ஜி.எஸ்.டி வரி அமலாக்க முறை என பலவற்றையும் மிகக்கடுமையாக விமர்சித்து பாஜக மூத்த தலைவரும், வாஜ்பாய் அரசில் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்படுத்தியுள்ள பொருளாதார குழப்பம்  குறித்து இப்பொழுதும் பேசவில்லை என்றால் அது இந்த தேசத்திற்கு செய்யும் பெரிய துரோகம் என குறிப்பிட்டுள்ளார். 

நிதியமைச்சராக அருண் ஜேட்லி பொறுப்பேற்று மூன்றாண்டுகளுக்கு பிறகும், தனியார் முதலீடுகள், நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் வளர்ச்சிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்படாத அளவுக்கு பெரிய பாதிப்பு எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமான தொழில், விவசாயம், ஏற்றுமதி துறை என அனைத்து தொழில் பிரிவுகளும் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த பொருளாதார சீரழிவு என்ரும் அவர் ஆதாரங்களுடன் விமர்சித்திருந்தார்.

தன் சொந்தக் கட்சியிலிருந்தே மிகக்கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்ட நிதியமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்பொழுது யஷ்வந்த் சின்ஹாவை தனிப்பட்ட வகையில் கடுமையாக விமர்சித்தார். 80 வயதைக் கடந்த பிறகும் யஷ்வந்த சின்ஹா வேலைக்கு விண்ணப்பித்துக் கொண்டிருப்பதாக விமர்சித்திருந்தார். மேலும், வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக இருந்தபோதுதான் நாட்டின் வாராக்கடன் அளவு 15% ஆக இருந்ததாகவும், அதை யச்ஜ்வந்த் சின்ஹா மறக்கக்கூடாது என்றும் விமர்சித்தார்.

இந்நிலையில், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள யஷ்வந்த் சின்ஹா “நான் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தால் இன்றைக்கு நிதியமைச்சராக இருக்கும் அருண் ஜெட்லி அந்த இடத்தில் இருந்திருக்க மாட்டார். நான் தனிப்பட்ட வகையில் விமர்சிக்கவில்லை. நிதியமைச்சராக இருப்பதால் தான் விமர்சிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும்,” தற்போது, அரசில் இருப்பவர்கள் பிரச்னை இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். மாறாக, அவர்களை அவர்களே புகழ்ந்துகொள்கிறார்கள். பிரச்னைகளின் எல்லைகளில் நின்று அவர்கள் செதுக்குகிறார்கள். பிரச்னைகளின் வேரைத் தாக்கி அழிப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு என்பதை நான் ஒரு சீர்திருத்தமாக கருதமாட்டேன் என்றும், அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோற்றுவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.