வெள்ளி, 22 செப்டம்பர், 2017

மத்திய அரசுடன் பேரம் பேசுகிறார் தாவூத் இப்ராகிம்: ராஜ்தாக்கரே September 22, 2017

மத்திய அரசுடன் பேரம் பேசுகிறார் தாவூத் இப்ராகிம்: ராஜ்தாக்கரே


இந்தியா திரும்புவதற்காக மத்திய அரசுடன் தாவூத் இப்ராகிம் பேரம் பேசுகிறார் என நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 1993-ல் நடைபெற்ற மும்பை குண்டு வெடிப்பு உள்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. 

ஆனால் தங்கள் நாட்டில் தாவூத் இப்ராகிம் இல்லவே இல்லை என பாகிஸ்தான் உறுதிபட மறுத்து வருகிறது. இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்தாக்கரே, தாவூத் இப்ராகிம் தற்போது கை, கால்கள் செயல் இழந்த நிலையில் மாற்றுத் திறனாளியாக இருக்கிறார் என்றும், அவர் இந்தியா திரும்ப ஆர்வமாக இருப்பதால், இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேரம் பேசி வருவதாகவும் கூறினார். 

தாவூத் இப்ராகிம் இந்தியா திரும்பியதும், இந்த விவகாரம் பாஜகவுக்கு அரசியல் ஆதாயமாக அமையும் எனவும் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.