செவ்வாய், 26 செப்டம்பர், 2017

உடையும் பனிப்பாறைகள்; பேரழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் பூமி..! September 26, 2017


உடையும் பனிப்பாறைகள்; பேரழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் பூமி..!


உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்று அண்டார்டிகாவில் இருந்து உடைந்து பிரிந்துள்ளதை புதிதாக வெளியான சேட்டிலைட் புகைப்படம் உறுதிசெய்துள்ளது.

உலகின் 5வது மிகப்பெரிய கண்டம் அண்டார்டிகா. புவியின் தென்முனையில் இந்த கண்டம் முழுவதும் ஏறக்குரைறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.

புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 சதவீதமானது இங்கேயே உள்ளது. இங்கு நிரந்தரமாக மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது. வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்வுக்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பைன் தீவு பனிப்பாறையில் ஏற்பட்ட பிளவால், 266 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள பனிப்பாறை ஒன்று பிரிந்துள்ளது. பைன் தீவு பனிப்பாறையானது அண்டார்டிகாவிலேயே மிகவும் வேகமாக உருகும் பனிப்பாறையாகும். 

இந்த பனித்தீவு முழுவதுமாக உருகிவிட்டால் உலகின் ஒட்டுமொத்த கடலின் நீர்மட்டம் 1.7 அடி அளவு அதிகரிக்கும். எனவே ஆராய்ச்சியாளர்கள் இந்த பனிப்பாறையை கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர். இந்த பனிப்பிளவானது அண்டார்டிகாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய பனிப்பிளவாகும்.

இதேபோல், 2 மாதங்களுக்கு முன்பு, மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ள லார்சன் சி பனியடுக்குப் பகுதியில் மிகப்பெரிய பனிப்பிளவு ஏற்பட்டது. இதனால் 5,000 சதுர கிலோமீட்டர் கொண்ட லண்டனை விட 4 மடங்கு பெரிதான பனிப்பாறை தனியாக பிரிந்தது. 

இதேபோல் அண்டார்ட்டிகாவின் வடக்கில் உள்ள பனியடுக்கான லார்சன் ஏ மற்றும் லார்சன் பி பகுதிகளில் இதுபோன்ற பனித் தகர்வுகள் ஏற்பட்டதால், அவை முற்றிலுமாக நொறுங்கிப் போயின.

உலக வெப்பமயமாதலின் காரணமாக அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் நாளுக்கு நாள் உருகி வரும் நிலையில் பூமியானது ஒரு பேராபத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதையே இந்த பனித்தகர்வுகள் நமக்கு காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.