செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பணிக்கு சேர்ந்து ஒரு மாதத்திற்குள் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரி! September 26, 2017

பணிக்கு சேர்ந்து ஒரு மாதத்திற்குள் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரி!


பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிந்த்கர் பகுதி காவல்நிலையத்தில் பணியில் சேர்ந்த மஹாவீர் பிரசாத் சோதியா, என்பவர் முதியவர் ஒருவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். அதனை தர மறுத்த முதியவர் மீது வரதட்சணை கொடுமை வழக்குடன், வேறு சில குற்ற வழக்குகளையும் பதிவு செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். 

ஏற்கெனவே முதியவரின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது மருமகள் வரதட்சணை புகார் அளித்துள்ளதையும் மஹாவீர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்சம் தர சம்மதித்த முதியவர் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். 

அவர்கள் அளித்த அறிவுரையின் படி ரசாயனம் தடவிய  ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதியவர் மஹாவீர் பிரசாத்துக்கு அளித்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.