சனி, 23 செப்டம்பர், 2017

தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக பிரமுகர்! September 22, 2017

தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக பிரமுகர்!


சென்னை திருவேற்காடு அருகே தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாரதிய ஜனதா கட்சி பிரமுகரை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை திருவேற்காடு அருகே உள்ள கீழ் அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் பரந்தாமன். இவரது வீட்டில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி, கற்களால் தாக்குதல் நடத்திவிட்டு காவல்துறையிடம் சென்றதாக புகார்தெரிவித்தார். இதில், பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் பரந்தாமன் வீட்டில் இருந்த கட்டில், ஷோபா  துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்தன.

இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவேற்காடு காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், சொத்துத் தகராறு பிரச்னையை திசை திருப்ப, பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் பரந்தாமன் தனது வீட்டிற்கு தானே தீ வைத்துக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் மீது, திருவேற்காடு காவல்துறையினர் ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.