செவ்வாய், 26 செப்டம்பர், 2017

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியைக்கு கத்திகுத்து! September 26, 2017

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியைக்கு கத்திகுத்து!


மதுரை பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் ஜெனிஃபா என்பவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் பேராசிரியர் ஜெனிஃபா. இவர் இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். 

அப்போது அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த பேராசிரியை ஜெனிஃபா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசாரின் விசாரணையில் பேராசிரியையை கத்தியால் குத்திய நபர் முன்னாள் கவுரவ விரிவுரையாளர் ஜோதிமுருகன் என்பதும், தமக்கு ஜெனிஃபா தொடர்ந்து விரிவுரையாளர் பணி அளிக்காததால் ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.