புதன், 27 செப்டம்பர், 2017

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 21,600 கன அடியை தாண்டியது! September 27, 2017

​மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 21,600 கன அடியை தாண்டியது!


கர்நாடகாவில் மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து, வினாடிக்கு 21,648 கனஅடியாக அதிகரித்துள்ளது.  

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கர்நாடகாவில் பெய்துவந்த மழையின் அளவு குறைந்தது. இதனால், அந்த மாநிலத்தின் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. 

இதனால் மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் மீண்டும் மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரித்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. 

இன்று காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 21 ஆயிரத்து 648 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து, வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, அணையின்  நீர்மட்டம் 84.69 அடியாக உயர்ந்தது.