தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று சென்னை வேளச்சேரியில் ஸ்கூட்டரில் விவிபேட் இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு அன்று மாலை இரண்டு பேர் இரு சக்கர வாகனம் ஒன்றில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து சென்றதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசாரின் விசாரணையில், வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது.
வேளச்சேரி தொகுதியில் அதிமுகவினர் வாக்குச்சாவடி மையத்தை கைப்பற்றி விவிபேட் இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றதாக திமுகவினர் குற்றம்சாட்டினர். இது குறித்து கேள்வி எழுந்தபோது, ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட வி.வி.பேட் இயந்திரம் பழுதானது என்றும் அதில் வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்று தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், வாக்குப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் இயந்திரங்கள் லாரிகளில் மட்டுமே எடுத்துச் செல்லவேண்டும் என்ற நிலையில், வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வி.வி.பேட் இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்டது ஏன் என்று கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று வேளச்சேரி தொகுதியில் இருசக்கர வாகனத்தில் வி.வி.பேட் இயந்திரம் கொண்டு சென்றது தேர்தல் விதி மீறல் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சத்யபிரதா சாகு வெளியிட்ட தெரிவிக்கையில், “வேளச்சேரியில் எடுத்துச்செல்லப்பட்ட வாக்கு இயந்திரம் 50 நிமிடங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. அதில் 15 வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் இருந்தது. இந்த தேர்தல் விதி மீறல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் நடவடிககி எடுக்கும். குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பதை இந்திய தலைமை தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வேளச்சேரியில், ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல என்றும், பழுதான 2 வி.வி.பேட் இயந்திரங்களும், 2 மாற்று இயந்திரங்களும்தான் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் அறிக்கையில் தேர்தல் ஆணையத்துக்கு விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களுக்குப் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
வேளச்சேரியில், ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், வி.வி. பேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருப்பது கவனத்தை பெற்றுள்ளது.
source : https://tamil.indianexpress.com/election/vvpat-machines-carried-by-two-wheeler-in-velachery-constituency-election-chief-satyabrata-sahoo-explains-290327/