கொரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசி முக்கிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் நல்ல முன்னேற்றும் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது, நோய் தொற்றின் வீரியம் அதிகரிப்பது, உயிரிழப்பது போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பல சர்வதேச ஆய்வு முடிவுகள், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது, தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா தொற்றுக்கு 88,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 63 சதவிகிதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், 24 சதவிகிதம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களும், 13 விழுக்காடு முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் ஆவர்.
இதில், கொரோனா பாதிப்பு வீரியம் அடைந்து மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,816 ஆகும். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,626 ஆகும்.
இந்த புள்ளிவிவரங்களை மதிப்பாய்வு செய்வதில், உயிரிழந்தோரில் 87 சதவிகிதம் பேரும், ஐசியூவில் அனுமதிக்கப்பட்டோரில் 76 சதவிகிதம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பொது சுகாதார இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம், ” கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும், தொற்று பாதிப்புக்கு ஏற்படுவது தெளிவாகத் தெரிகிறது. அதன் காரணமாக, தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது
போன்ற கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றக் கூறுகிறோம்.
இருப்பினும், பாதிப்பின் வீரியம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் குறைவாக உள்ளது. அதே சமயம், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் ஐசியூவில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பது அதிகளவில் உள்ளது. தற்போது, அதிகளவில் தடுப்பூசி போடுவது, மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொரோனா பரவலை குறைத்துள்ளது” என்றார்.
10 10 2021
source https://tamil.indianexpress.com/tamilnadu/87-percent-of-covid-death-in-august-and-september-are-unvaccinated/