ஞாயிறு, 31 அக்டோபர், 2021

பார்களுக்கு வருவோரின் விவரம் சேகரிப்பு… வழிகாட்டு நெறிமுறையில் என்னென்ன கட்டுப்பாடுகள்?

 31 10 2021 தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பார்களில் அமர்ந்து மது அருந்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் பார்களை நாளை (நவம்பர் 1) முதல் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

மாநிலம் முழுவதும் செயல்படும் 5425 மதுபானக்கடைகள், அங்கு இயங்கிவரும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்களும் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா கட்டுக்குள் இருந்தாலும், தினசரி பாதிப்பு பதிவாகி வருவதால் பார்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதில், மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி அமர ஏற்பாடு செய்ய வேண்டும். இடையே 6 அடி இடைவெளி விட வேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்கவேண்டும். பாரில் எச்சில் துப்பக்கூடாது. நுழைவுவாசலில் சானிடைசரும், காய்ச்சல் இருக்கிறதா என தெரிந்துகொள்ளும் தெர்மல் ஸ்கிரீனிங் கருவியும் வைத்திருக்கவேண்டும். அவ்வப்போது பார் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, பார்களுக்கு வருகை தரும் நபர்களின் தொலைபேசி எண், பெயர், முகவரி போன்ற விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். இந்த பதிவேடை அனைத்து பார்களிலும் முறையாக பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tasmac-released-sop-for-bar-attached-to-tasmac-outlets-362606/