சனி, 30 அக்டோபர், 2021

தமிழ்நாடு சர்ச்களில் பிரச்னைகளை சரி செய்ய வாட்டிகன் தலையீடு!

 Vatican intervention to rectify aberrations in Tamil Nadu church, TNBC, Vatican, தமிழ்நாடு சர்ச்களில் பிரச்னைகளை சரி செய்ய வாட்டிகன் தலையீடு, church, kerala, tamil nadu

அக்டோபர் 8ம் தேதியிட்ட ஒரு கடிதத்தில், இந்தியாவின் அப்போஸ்தலர் தூதர் – புது டெல்லிக்கான வாட்டிகன் தூதுவர் – தமிழ்நாட்டு மதகுருமார்களுக்கு சுதந்திரமான அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பதவி வகிப்பதில் இருந்து விலகி இருக்குமாறு கடுமையாகச் கூறிய செய்தியை வெளியிட்டது. மேலும், அவர்கள் சம்பந்தப்பட்ட பாதிரியார்களுக்கு நிதி மற்றும் அரசியல் அதிகார தளங்களாக மாறுகிறார்கள் என்று அது கூறியுள்ளது.

உத்தரவு

இந்தியாவில் உள்ள வாட்டிகன் தூதர், 18 பிஷப்கள் அடங்கிய தமிழ்நாடு பிஷப்ஸ் கவுன்சிலை (டி.என்.பி,சி), மறைமாவட்டத்தின் முறையான அனுமதியின்றி குருமார்கள் தனி அறக்கட்டளைகள் அல்லது சங்கங்களுடன் தொடர்புகொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்து திருத்தம் செய்து மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். தேவாலயத்திற்கு வெளியே உள்ள சுயாதீன நிறுவனங்களுடனான மதகுருமார்களின் தொடர்பு, அவர்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்குவதாக இருந்தாலும், அவர்கள் நிதி மற்றும் அரசியல் அதிகார ஆதரவு தளங்களாக ஆக்குகிறது என்று இந்த உத்தரவு சுட்டிக்காட்டியுள்ளது.

அப்போஸ்தலிக் கடிதம், சர்ச் சட்டம் 286ஐ மேற்கோள் காட்டியுள்ளது. இது “மதகுருமார்கள் தனிப்பட்ட முறையில் அல்லது மற்றவர்கள் மூலமாக, தங்கள் சொந்த நலனுக்காக அல்லது மற்றவர்களின் நலனுக்காக, முறையான சிறப்பு அதிகாரத்தின் அனுமதியின்றி வணிகம் அல்லது வர்த்தகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது” என்று கூறுகிறது.

இப்போது ஏன் இந்த உத்தரவு?

தமிழ்நாடு பிஷப் கவுன்சில், உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகையில், போப் பிரான்சிஸ் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஊழல் மற்றும் மதகுருமார்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிற தீவிரமான பிறழ்வு நடவடிக்கைகள் குறித்து பல புகார்களைப் பெற்றுள்ளார். “தமிழகத்தில், தேவாலயத்தைக் கட்டுப்படுத்தவும், பிஷப் பதவிகளுக்கு லாபி செய்யவும், தங்கள் அரசியல் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்தி, சேவை செய்யும் பிஷப்புகளை சுயநலத்துக்காக கொடுமைப்படுத்தும் சில பாதிரியார்கள் உள்ளனர்” என்று கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் சமீபத்திய முன்னேற்றம் பற்றி கேட்டபோது தமிழ்நாடு பிஷப் கவுன்சிலின் மற்றொரு உறுப்பினர், “பாதிரியார்கள் அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ இல்லாமல், ஆன்மீக ரீதியாக வலுவாக இருக்கும்போது சக்திவாய்ந்தவர்களாக மாறுவார்கள்.” என்று கூறினார்.

குறைந்தபட்சம் 3 அல்லது 4 குறிப்பிடத்தக்க சம்பவங்களாவது வாட்டிகனை இந்த உத்தரவை பிறப்பிக்க கட்டாயப்படுத்தியிருக்கலாம். அவர்கள் அரசியல் கட்சிகள் போன்ற மற்ற அனைத்து நிறுவனமயமாக்கப்பட்ட நிறுவனங்களிடையே இது பொதுவாக காணப்படுகிறது என்றாலும், முக்கிய விழுமியங்களில் இருந்து ஒரு பெரிய பாதிப்பையும் தீவிர மாறுபாடுகளையும் சுட்டிக்காட்டுகின்றன:

  • தென் தமிழ்நாட்டின் கோட்டார் மறைமாவட்டத்தின் முன்னாள் பிஷப் ஒருவர், நிதி திரட்டி மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான அறக்கட்டளை தொடங்கியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். பின்னர், புதிய பிஷப் பொறுப்பேற்க வந்தபோது, ​​அது தனது தனிப்பட்ட அறக்கட்டளை என்று கூறினார். ஆனால், மருத்துவக் கல்லூரி திட்டம் தொடங்கப்படவே இல்லை.
  • திருநெல்வேலியில் ஒரு பாதிரியார் தமிழ்த் தேசியக் கட்சியின் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பாதிரியார் அங்கி அணிந்து கொண்டு அரசியல் கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் உரையாற்றத் தொடங்கினார். தமிழ்நாடு பிஷப் கவுன்சில் வட்டாரம் கூறுகையில், அந்த பாதிரியார், மதகுருமார்கள் மத்தியிலும் அந்த கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் துணிந்ததாகக் கூறினார்.
  • தென் தமிழகத்தில் பெரும் நிதியின் ஆதரவுடன் அறக்கட்டளையை நடத்தி வரும் ஒரு சக்திவாய்ந்த பாதிரியார், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்காக கைது செய்யப்பட்டார். அவரது தொனியும் வாசகமும் மதகுருக்களுக்கு பொருத்தமற்றதாக இருந்தாலும், உள்ளூர் மறைமாவட்டத்தில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக ஒரு பிஷப்பை ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தியதற்காக அவர் சர்ச்சைகளின் மையமாக இருந்தார்.

சக்தி வாய்ந்த தென்னிந்திய திருச்சபையின் முன் உள்ள சவால்கள்

மிகவும் நிறுவனமயமாக்கப்பட்ட மற்றும் பழமையான தேவாலய அமைப்பில் மிகவும் சக்தி வாய்ந்தது கேரள சர்ச்கள். அவர்களின் பிஷப்புகள் மற்றும் மூத்த குருமார்கள், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள், உயர் பிஷப் சம்பந்தப்பட்ட பரபரப்பான நில மோசடிகள், அரசியல் கட்சிகளுடன் கூட்டு என பல ஆண்டுகளாக சர்ச்சைகளின் மையமாக உள்ளனர். பிஷப்கள் தாங்களாகவே பிற சமூகங்கள் மீது வகுப்புவாத நோக்கங்களைக் கூறி ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றனர். மேலும், போர்த்துகீசிய காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்த சில ‘பியூரிட்டன்’ (கடும் தூய்மைவாதம்) நடைமுறைகளை மீட்டெடுக்கிறார்கள்.

மறுபுறம், தமிழ்நாடு சர்ச்கள் எப்போதும் செல்வத்தை விட மதிப்புகளில் வலிமை வாய்ந்தது. கேரளாவைப் போலல்லாமல், தமிழ்நாட்டில் பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 1970களில் விடுதலை இறையியல் இயக்கத்தின் விழுமியங்கள் மற்றும் காரணங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைமுறை மதகுருமார்களுக்கு நன்றி. தமிழ் பாதிரியார்களும் தங்கள் தன்னலமற்ற வாழ்க்கை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் பெரிய காரணங்களுக்காக பொது போராட்டங்களை முன்னெடுப்பதில் வகித்த துணிச்சலான பங்களிப்புக்காக அறியப்பட்டனர். கூடங்குளம் போராட்டங்கள் அல்லது தமிழ்நாட்டில் ஒரு டஜன் பொது இயக்கங்கள், அல்லது 2009ல் முடிவடைந்த வட இலங்கை போராக இருந்தாலும், தமிழ் பாதிரியார்கள் எப்போதும் மக்களுடன், நீதியையும் அமைதியையும் நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர்.

கத்தோலிக்க தேவாலயத்தில் முக்கியமாக இரண்டு வகையான குருமார்கள் உள்ளனர் – மத மற்றும் மறைமாவட்டம் என 2 வகை குருமார்கள் உள்ளனர். அப்போஸ்தலிக் தூதர் உத்தரவு மறைமாவட்ட மதகுருமார்களை இலக்காகக் கொண்டது. அவர்களின் உறுதிமொழி உள்ளூர் பிஷப்புக்கு கீழ்ப்படிவதற்காக மட்டுமே உள்ளன. மத குருமார்களைப் போலல்லாமல் – இயேசுசபையினர், கன்னியாஸ்திரிகள் அல்லது மிஷனரிகளின் அறக்கட்டளை – கீழ்ப்படிதல், ஒழுக்கம் மற்றும் வறுமை ஆகியவற்றின் உறுதிமொழிகளை எடுத்துக்கொள்கிறார்கள்.

மத குருமார்களைப் போலல்லாமல், மறைமாவட்ட குருமார்கள் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் அல்லது சொந்தமாக சொத்துக்களை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நடத்துவதன் மூலம் ஒரு சில தனிப்பட்ட பாதிரியார்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் படிநிலையில் உள்ள தாராளவாத அம்சம் இது என்று தேவாலயம் பார்க்கிறது.

மேலே குறிப்பிடப்பட்ட, குருமார்களின் பிறழ்வுகள் இந்த உத்தரவு மூலம் கையாளப்படலாம் என்றாலும், சமீபத்திய நெருக்கடி குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்ட ஒரு மூத்த மதகுருமார், சாதிப் பிரச்சினைகளும் இங்கு ஒரு பெரிய வில்லனாக செயல்படுகின்றன. குறிப்பாக தங்கள் முந்தைய சாதி அடையாளத்தை துடைக்கத் தவறிய பக்தர்களிடையேயான போட்டியும் அல்லது இந்து பிற்படுத்தபட்டோரில் இருந்து மதம் மாறியவர்களுக்கும் இந்து தலித் அல்லது பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடையிலான பதற்றம் இருக்கிறது என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/explained/the-vatican-intervention-to-rectify-aberrations-in-tamil-nadu-church-362069/