ஞாயிறு, 31 அக்டோபர், 2021

போலீஸ் வாகனத்தின் மீது இளைஞர்கள் குத்தாட்டம்… தேவர் விழாவில் விதிமீறல்

 

30 10 2021 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற்றது

இந்நிலையில் நேற்று, பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதே போல, பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்ததால் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில், கமுதியில் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள சென்ற இளைஞர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்டனர். இதன் காரணமாக, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளும், கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவிட்-19 நெறிமுறைகள் காரணமாக தலைவருக்கு அஞ்சலி செலுத்த பொது மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்திருந்தது. ஆனால், உத்தரவை மீறி திரண்ட இளைஞர்கள், போலீஸ் வாகனத்திலே ஏறி நடனமாடியுள்ளனர். அந்த காணொலியில், காவல் துறையினர் அவர்களை தடுக்காமல் அமைதிகாத்தது தெளிவாக தெரிந்தது.

இதுகுறித்து நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் பேசிய ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக், சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. காவல் துறை வாகனத்தின் மீது நடனமாடிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.

அதே போல், மதுரையில் கோரிபாளையத்தில் அரசு பேருந்து ஒன்றின் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள், இறுதியாக பேருந்தின் மீது கல் ஏறிந்தி கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/youths-caught-on-camera-dancing-on-police-van-362554/