வெள்ளி, 8 அக்டோபர், 2021

சென்னை ஐகோர்டில் அரசு வழக்கறிஞர்களாக தொடரும் அதிமுக வழக்கறிஞர்கள்!

 07 10 2021 சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, மாவட்ட நீதிமன்றங்கள், வாரியங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 300 அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் காலியாக உள்ளன அல்லது முந்தைய அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.

இருப்பினும், திமுகவின் சட்டப் பிரிவை முன்னின்று நடத்தும் மூத்த வழக்கறிஞர்கள், அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட கடுமையான அரசு உத்தரவுகள் மற்றும் நிலவும் தொற்றுநோய் நிலைமைகள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்தும் வகையில் 2019 அரசாணை ஜூலை 2021 இல் திருத்தப்பட்டிருந்தாலும், கோவிட் பொதுமுடக்கம் காரணமாக வழக்கறிஞர்களை நியமனம் செய்வதற்கான செயல்முறையை தாமதப்படுத்தியது என்று திமுக சட்டப் பிரிவு வழக்கறிஞர்கள் கூறினர்.

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம் ஊடகங்களிடம் கூறுகையில், “240 பணியிடங்களுக்காக 2,800 விண்ணப்பங்களை நாங்கள் பெற்றுள்ளோம். பல பக்கங்களில் இருந்து பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்வது எளிதான காரியமல்ல. தகுதிவாய்ந்த நபர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளதை குறிப்பிட்டுள்ளோம்.

இது தவிர, இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் போலீஸ் மற்றும் பார் கவுன்சில் சரிபார்பான விசாரணையை தெளிவுபடுத்த வேண்டும் என்பதால் அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறையைத் தாமதப்படுத்தியது. பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. நியமனங்கள் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படலாம்” என்று கூறினார்.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட பல வழக்கறிஞர்கள் பல நீதிமன்றங்களில் இன்னும் தற்போதைய அரசாங்கம் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகையில், “இந்த வழக்கறிஞர்கள் பலர் பலமுறை கேட்ட பிறகும்கூட வழக்கு கட்டுகளை ஒப்படைக்க மறுக்கின்றனர். இந்த பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்.” என்று கூறினார்.

அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செயல்முறை தாமதமானதற்கான காரணங்களை விளக்கிய திமுக ராஜ்யசபா எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர் இளங்கோ கூறுகையில், “திமுக மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தது. ஜூன் மாதத்தில் நீதிமன்றங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. அதுவும் காணொலி வழியாக மட்டுமே திறக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆகஸ்ட் மாதம்தான் எங்களால் தேர்வு செயல்முறையை தொடங்க முடிந்தது.” என்று கூறினார்.

2019 விதிகளில் பல தடைகள் இருப்பதை குறிப்பிட்ட வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “ஒரு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் வருமானம் காட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். கோவிட் -19 காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பலர் இந்த நிபந்தனைக்கு இணங்க முடியவில்லை.

இது தவிர, இந்த விதிகளுக்கு உயர்நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் 3 வருட பயிற்சி தேவை. விதிகளை திருத்துவதன் மூலம் இந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டது என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-lawyers-continue-as-govt-advocate-in-madras-high-court-why-dmk-late-to-appoint-news-lawyer-352643/

Related Posts: