திங்கள், 8 மே, 2023

டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்…!

 

8 5 23

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போலீஸ் சீருடையில் வந்த சிலர் மல்யுத்த வீரர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து தங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அண்மையில் உருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.


இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க விவசாயிகள் முன்வந்தனர். அப்போது அவர்களை டெல்லி எல்லை பகுதியில் தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் காவல்துறையின் தடுப்புகளை மீறி விவசாயிகள் மல்யுத்த போராட்ட களத்திற்கு சென்று தங்களது ஆதரவை அளித்துள்ளனர்.

source https://news7tamil.live/farmers-came-out-in-support-of-wrestlers-in-delhi.html