வெள்ளி, 1 மே, 2026

தமிழகத்தில் 95 நீதிபதிகள் இடமாற்றம்

 தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் 95-க்கும் மேற்பட்ட நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதில் குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பணமோசடி வழக்கையும், நடிகர் விஜயின் விவாகரத்து வழக்கையும் விசாரித்து வந்த நீதிபதிகள் மாற்றப்பட்டிருப்பது சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் பணியாற்றும் 95-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ். அல்லி உத்தரவிட்டுள்ளார். இந்த இடமாற்றத்தில் முக்கிய அரசியல் மற்றும் விஐபி வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்கள் மீதான சொத்துக் குவிப்பு மற்றும் பணமோசடி வழக்குகளை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் சி. சஞ்சய் பாபா மற்றும் என். வேங்கடவரதன் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.

த.வெ.க தலைவர் விஜய் தொடர்பான விவாகரத்து வழக்கை விசாரித்து வரும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா அவர்களும் இந்தப் பணியிட மாற்றப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

நீதிபதிகள் இடமாற்றம் ஒருபுறம் இருக்க, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளைக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. மே 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர வழக்குகளை விசாரிக்க மட்டும் வாரத்திற்கு இருமுறை (புதன் மற்றும் வியாழன்) 'விடுமுறைக்கால அமர்வு' செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 5 2026



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-95-judges-transferred-senthil-balaji-actor-vijay-case-judges-transfer-11784276