/indian-express-tamil/media/media_files/2025/12/04/medical-college-2025-12-04-05-51-41.jpg)
2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு, தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், சேலத்தில் உள்ள பிளஸ் மேக்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என்ற புதிய தனியார் கல்லூரி எம்.பி.பி.எஸ் படிப்பைத் தொடங்க விண்ணப்பித்துள்ளது. அதேபோல், ஏற்கனவே உள்ள சில கல்லூரிகள் கூடுதல் இடங்களை கோரியுள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இந்த முன்மொழிவுகளை ஆய்வு செய்த பின்னரே இடங்களின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும் என்று மாநிலத் தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025-ஆம் ஆண்டில், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் எய்ம்ஸ்-மதுரை என மொத்தம் 78 கல்வி நிறுவனங்கள் இருந்தன. அரசு கல்லூரிகளிர் 5,050 எம்.பி.பி.எஸ் இடங்கள். இ.எஸ்.ஐ.சி (ESIC) மருத்துவக் கல்லூரி (கே.கே. நகர்) 150 இடங்கள், எய்ம்ஸ் மதுரை 50 இடங்கள், சுயநிதி கல்லூரிகள், 3,900 இடங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் முறையே 850 மற்றும் 3,050 இடங்கள் உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை நிறுவுவதே மாநில அரசின் கொள்கை என்றும், இதற்காக புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இருப்பினும், இந்திய மருத்துவச் சங்கம் (IMA) மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (TNDGA) உள்ளிட்ட அமைப்புகள், புதிய கல்லூரிகளைத் திறப்பதையோ அல்லது இடங்களை அதிகரிப்பதையோ தள்ளி வைக்குமாறு அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) விதிமுறைப்படி 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தற்போது சுமார் 700 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தலைவர் டாக்டர் கே. செந்தில், தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் 10,000 எம்.பி.பி.எஸ் பட்டதாரிகளும், 1,500 வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளும் உரிமம் கோரி விண்ணப்பிப்பதால், அடுத்த 10 ஆண்டுகளில் 350 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை ஏற்படும். மேலும், தமிழகத்தின் பிறப்பு விகிதம் 1.4 ஆக இருப்பதால் மக்கள் தொகையும் குறைந்து வருகிறது. எனவே, எம்.பி.பி.எஸ் இடங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, முதுநிலை (PG) மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளர்.
இருப்பினும், இந்திய அளவில் உலக சுகாதார அமைப்பின் (WHO) விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய இன்னும் கூடுதல் மருத்துவர்கள் தேவைப்படுவதால், தமிழகக் கல்லூரிகள் நாட்டுக்கு அதிக மருத்துவர்களை வழங்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், மாநிலத்திற்குள்ளேயே மருத்துவர்களின் பரவல் சீராக இல்லை என்றும், அதிக மருத்துவக் கல்லூரிகள் உருவாவதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகள் மற்றும் மருத்துவர்களின் முறையான பகிர்வு உறுதி செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-medical-college-seat-matrix-chance-less-for-increase-update-in-tamil-11780408





