வெள்ளி, 13 அக்டோபர், 2017

சாயப் பட்டறைக் கழிவுகள் கலப்பதால் நிறம் மாறும் நொய்யல் ஆறு October 13, 2017

சாயப் பட்டறைக் கழிவுகள் கலப்பதால் நிறம் மாறும் நொய்யல் ஆறு


திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீண்டும் முறைகேடாக சாயக்கழிவு நீர் திறக்கப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் பெய்த மழையின் காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் அதிகளவு நுரை வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு தொழில் அமைப்புகள் இணைந்து நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள வளம் பாலம் அருகே சிவப்பு நிறத்தில் சாயக்கழிவு நீர் வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் முறைகேடாக செயல்படும் தொழிற்சாலைகள் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, திருப்பூரில் டெங்கு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா  சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில், இடைத்தேர்தலோ, உள்ளாட்சித்தேர்தலோ நடக்க வாய்ப்பில்லை என்றார். 

மேலும், அதிமுகவின் ஆட்சி கவிழ்ந்து இன்னும் 6 மாதங்களில் சட்டமன்றத்தேர்தல் நடக்கும் என்றும் பிரேமலதா தெரிவித்தார். பாவத்தைப் போக்க காவிரி ஆற்றில் குளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  திருப்பூர் நொய்யல் ஆற்றில் குளிக்கத்தயாரா ? என்றும் பிரேமலதா கேள்வி எழுப்பினார்.

Related Posts: