செவ்வாய், 31 அக்டோபர், 2017

சந்திராயன்-2 செயற்கைக்கோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படுகிறது October 9, 2017

நிலவை ஆராய்ச்சி செய்வதற்கான சந்திராயன்-2 செயற்கைக்கோள், அடுத்தாண்டு ஏவப்பட உள்ளதாக, மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் பாண்டியன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதனை தெரிவித்தார். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், அக்டோபர் 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில், விண்வெளி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பின், மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது 2018-ம் ஆண்டு சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகள் மகேந்திரகிரி இஸ்ரோ மைய வளாகத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கு, ஆதித்யா என்ற செயற்கைகோளை அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும், 2023-ல் வெள்ளி கோளை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்புவது குறித்து, ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
Image