புதன், 25 அக்டோபர், 2017

​டெங்கு தடுப்பு ஆய்வு கூட்டத்தில் காகிதத்தில் கோலமிட்டு பொழுதுபோக்கிய பெண் அதிகாரி..! October 25, 2017

​டெங்கு தடுப்பு ஆய்வு கூட்டத்தில் காகிதத்தில் கோலமிட்டு பொழுதுபோக்கிய பெண் அதிகாரி..!


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற டெங்கு தடுப்பு ஆய்வு கூட்டத்தில், பெண் அதிகாரி ஒருவர், காகிதத்தில் கோலமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், டெங்கு தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு குறித்து மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் ஆலோசனைகளை வழங்கினர். 

இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர், டெங்கு தடுப்பு குறித்த ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல், தான் வைத்திருந்த காகிதத்தில் கோலமிட்டு பயிற்சி மேற்கொண்டார். 

அருகில் இருந்த மற்றோரு பெண் அதிகாரி, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் அவர் கோலமிடுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார். 

அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பெண் அதிகாரி இவ்வாறு அலட்சியமாக நடந்து கொண்டது, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.