செவ்வாய், 31 அக்டோபர், 2017

குடிநீருக்கான ஏரியில் கழிவுநீரை கலக்க முயன்ற அதிகாரிகள்! October 31, 2017

சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து கழிவுநீரை விட முயன்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் கன மழையால் அம்பத்தூர், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற வழி தெரியாத சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து கழிவு நீரை அதில் விட முடிவு செய்து ஜேசிபி இயந்திரம் மூலம் கரையை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்து அங்கு கூடிய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கரையை அடைத்தனர். கொரட்டூர் ஏரியில் எந்தவொரு கழிவு நீரும் கலக்க விடக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில் அதிகாரிகளின் இந்த செயல் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
Image