வியாழன், 19 அக்டோபர், 2017

சூதாட்ட விவகாரம்:

​சூதாட்ட விவகாரம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீசாந்த்!


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளருமான ஸ்ரீசாந்த், இவர் 6வது ஐபிஎல் தொடரில் (2013) ராஜஸ்தான் அணியில் பங்கேற்று விளையாடிய போது ஸ்பாட் ஃபிக்சிங் சர்ச்சையில் சிக்கினார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி நீதிமன்றம் ஸ்ரீசாந்தை கைது செய்தது. இதனால் பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது. பின்னர் விசாரித்த டெல்லி நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என ஸ்ரீசாந்தை விடுவித்தது. எனினும் அவர் மீதான தடையை நீக்க பிசிசிஐ மறுத்தது.

வாழ்நாள் தடையை நீக்குவது தொடர்பாக ஸ்ரீசாந்த் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை தொடரும் என நேற்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மோசமான முடிவு என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். சூதாட்டத்தில் ஈடுபட்டது நீரூபிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான தடையை மட்டும் நீக்கியது எப்படி என வினா எழுப்பியுள்ளார். 

மேலும் உச்சநீதிமன்றத்தில் லோதா கமிட்டி அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 வீரர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.