வெள்ளி, 20 அக்டோபர், 2017

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு! October 20, 2017

தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு!


தீபாவளியையொட்டி டெல்லியில் வெடிவிற்பனைக்குத் தடை விதித்தும் வெடிகளால் ஏற்படும் காற்றுமாசு கடுமையாக அதிகரித்துள்ளது. 

டெல்லி மற்றும் டெல்லிக்கு அருகில் உள்ள அரியானா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  தலைநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனால் பட்டாசு விற்பனை குறைந்து தலைநகரில் புகைமூட்டமும் காற்று மாசும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக டெல்லியின் அனைத்துப் பகுதிகளிலும் வழக்கம்போலவே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு தீபாவளி கொண்டாடப்பட்டது. வெடிகள் வெடித்ததால் வானில் கரும்புகை மூட்டம் எழுந்தது. சாலைகளிலும் அடர்ந்த புகைமூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை இயக்கினர். 

குடியிருப்புப் பகுதிகளில் புகை மூட்டம் சூழ்ந்ததால் நோயாளிகளும் குழந்தைகளும் இன்னலுக்குள்ளாகினர். இரவு 11மணியில் இருந்து அதிகாலை மூன்று மணிவரை காற்றுமாசுபாடு உச்ச அளவை எட்டியதாகக் காற்றுத் தரக் கட்டுப்பாட்டு அமைப்புத் தெரிவித்துள்ளது.

டெல்லியில் பட்டாசு விற்க தடை விதிக்கப்பட்டும் பொதுமக்கள் பட்டாசுகளை அதிக அளவில் வெடித்தது இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.