வியாழன், 29 செப்டம்பர், 2022

பி.எஃப்.ஐ அமைப்பும் உறுப்பினர்களும் இனி சந்திக்கும் சிக்கல்கள் என்ன?

28 09 2022

பி.எஃப்.ஐ அமைப்பும் உறுப்பினர்களும் இனி சந்திக்கும் சிக்கல்கள் என்ன?

பாப்புல ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (1967) கீழ், சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய சட்ட அமலாக்கத்துறை முகமைகள், மாநில காவல்துறை அந்த அமைப்பின் உறுபினர்களை கைது செய்யவும் அதன் வங்கிக் கணக்குகளை முடக்கவும், சொத்துகளை பறிமுதல் செய்யவும் உரிமை உள்ளது. இந்த சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் சில குறிப்பிடத்தக்க விளைவுகள் கீழே அளிக்கப்பட்டுள்ளது.

உபா சட்டத்தின் (UAPA) பிரிவு 10 தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களை குற்றவாளிகளாக்குகிறது. தடைசெய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருந்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அது சில சூழ்நிலைகளில் ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை வரை நீட்டிக்கப்படலாம் என்றும் அது கூறுகிறது.

*பிரிவு 10 மேலும் கூறுகிறது, “அத்தகைய அமைப்பில் உறுப்பினராக இருப்பவர், தொடர்ந்து உறுப்பினராக இருப்பவர்; அல்லது அத்தகைய அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்பவர், அல்லது அத்தகைய அமைப்பின் நோக்கத்திற்காக எந்த பங்களிப்பையும் பங்களிப்பவர் அல்லது பங்களிப்பை பெறுபவர் அல்லது பங்களிப்பை கோருபவர் அல்லது அத்தகைய அமைப்பின் செயல்பாடுகளுக்கு எந்த விதத்திலும் உதவுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதமும் விதிக்கப்படும்.” என்று கூறுகிறது. இது தடைசெய்யப்பட்ட அமைப்பின் நோக்கங்களுக்கு உதவும் எந்தவொரு நபருக்கும் பொருந்தும்.

*இந்த விதியைப் பயன்படுத்தி அடல் பிஹாரி அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பிறகு, மத்திய அரசின் அமைப்புகளும், மாநில காவல் துறையும் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம் அமைப்பின், உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானவர்களை பல ஆண்டுகளாக கைது செய்துள்ளன.

*தடைசெய்யப்பட்ட சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறப்படும் நபர்களை கைது செய்ய, நாட்டின் இடதுசாரி தீவிரவாதத்தால் (LWE) பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாநில காவல்துறையினரால் இந்த விதி அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

*அந்த நபர் துப்பாக்கிகள் அல்லது வெடிபொருட்களை வைத்திருந்தால், அதனால் உயிர் இழப்பு அல்லது கடுமையான காயங்கள் அல்லது சொத்துக்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டால், அந்த நபருக்கு மரண தண்டனை அல்லது (உயிரிழப்பு எதுவும் நடக்காத சூழ்நிலைகளில்) ஐந்து ஆண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று இந்த சட்டம் கூறுகிறது.

*உபா சட்டத்தின் (UAPA) பிரிவு 7, சட்டவிரோத அமைப்பு நிதியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குகிறது.

*ஒரு அமைப்பு தடை செய்யப்பட்ட பின்னர், “சட்டவிரோதமான சங்கத்தின் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்தப்படும் பணம், பத்திரங்கள் அல்லது வரவுகளை யாரேனும் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று விசாரணைக்குப் பிறகு மத்திய அரசு உறுதி செய்தால், அத்தகைய பணம், பத்திரங்கள் அல்லது வரவுகள் அல்லது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு தனது கட்டுப்பாட்டில் வரக்கூடிய பிற பணம், பத்திரங்கள் அல்லது வரவுகளுடன் எந்த விதத்திலும் பணம் செலுத்துதல், வழங்குதல், மாற்றுதல் அல்லது வேறுவிதமாகக் கையாளுதல் ஆகியவற்றிலிருந்து அந்த நபரை மத்திய அரசு எழுத்துப்பூர்வமான உத்தரவு மூலம் அதை தடை செய்யலாம் என்று இந்த சட்டம் கூறுகிறது.

*இது போன்ற அமைப்புகளின் வளாகங்களை சோதனையிடவும், ஆய்வு செய்யவும் அவர்களின் வங்கிக் கணக்குப் புத்தகங்களை ஆய்வு செய்யவும் மத்திய அரசின் அமைப்புகள் மற்றும் காவல்துறைக்கு அதிகாரங்களை வழங்குகிறது.

*உபா சட்டதின் பிரிவு 8-இல் குறிப்பிட்டுள்ளபடி, இத்தகைய சட்டவிரோத அமைப்பின் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் எந்த இடத்தையும் அதாவது, வீடு அல்லது கட்டிடம், அல்லது கட்டிடத்தின் ஒரு பகுதி அல்லது ஒரு கூடாரம் அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதியை உள்ளடக்கிய இடத்தை தடை செய்யப்பட்ட இடமாக அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

*இந்த சட்டத்தின்படி, மத்திய அரசு ஒரு இடத்தை தடை செய்யப்பட்ட இடமாக அறிவித்த பிறகு, உள்ளூர் மாவட்ட மாஜிஸ்திரேட் அந்த இடத்தில் உள்ள அனைத்து பொருட்களின் பட்டியலையும் தயாரிக்க வேண்டும். சட்டவிரோத அமைப்பின் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்று மாஜிஸ்திரேட் கருதும் பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடது என்று தடை செய்யலாம்.

*2016 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐ.ஆர்.எஃப்) ஜாகிர் நாயக்கின் நிதி மற்றும் அசையா சொத்துக்களை முடக்க மத்திய அமைப்புகளால் இந்த விதிகள் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டன. 



source https://tamil.indianexpress.com/explained/pfi-ban-uapa-law-members-can-arrest-freeze-accounts-assets-confiscates-517495/