வியாழன், 29 செப்டம்பர், 2022

சாடிய திருமாவளவன்

 29 09 2022

சனாதன சக்தியுடன் கூட்டணி வைத்து அதிமுகவும், பாமகவும் மக்களுக்கு துரோகம்
செய்ய கூடாது என்றும், இந்தியாவில் வன்முறையில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை
தடை செய்ய வேண்டும் எனவும் மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரை அண்ணாநகரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மணி விழா மற்றும் சனாதன சக்திகளை தனிமைப் படுத்துவோம் எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மதுரை எம்பி சு.வெங்கடேசன்,
ராமநாதபுரம் எம்பி நவாஸ் கன்னி, மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்
பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு :
ஆ.ராசா பேசியதில் தவறில்லை. ஆ.ராசாவை எதிர்த்து பேசுபவர்களுக்கு சொல்கிறேன்,
ஆ.ராசா பேசியதை நான் வழிமொழிகிறேன். அவரை மட்டுமல்ல என்னையும் சேர்த்து
திட்டுங்கள், உண்மையை சொன்னால் ஏன் கோபிக்கிறீர்கள். சனாதனம் குறித்து பேச
கூடாது என்கிறீர்கள். ஆளுநருக்கு என்று சில பணிகள் இருக்கிறது. அதை மட்டும்
செய்யுங்கள். சனாதனத்துக்கு ஆதரவாக ஆளுநர் பேசிக் கொண்டிருக்கிறார். மனு
தர்மத்தில் உள்ளதை தான் சொல்கிறோம். அது எங்களுடைய கற்பனை அல்ல என்றார் அவர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு:

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தெற்கே ஒரு தலைவர் இருக்கிறார்
எனில் அது திருமாவளவன் தான். சனாதன சக்திகளுக்கு இந்தியாவில் யார் முதல் எதிரி என்று கேட்டால் அது திருமாவளவன் தான், எந்த காலத்திலும் இல்லாத ஆபத்து இந்தியாவை சூழ்ந்து கொண்டிருக்கிறது. ஒற்றை இந்தியாவை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எந்த காலத்தில் இருந்தது ஒரே இந்தியா? யாரும் தெற்கே காலடி வைத்தது கிடையாது, தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒழித்து விட்டு இந்தியா எனும் பெயரில் இந்தியை வைத்து ஆட்சி நடத்த நினைக்கிறார்கள்.

அதை எதிர்த்து தென் இந்தியாவிற்கு தலைமை தாங்க ஸ்டாலின் இருக்க வேண்டும் என்றும், அவருக்கு பக்கபலமாய் இருப்பேன் என்று சொன்னார் திருமா. அதை நானும் இங்கே வழிமொழிகிறேன் என்றார் வைகோ.

விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

சனாதன சக்திகள் நாட்டை பாழாக்கும் நாசகார சக்திகள். அவர்களோடு யாரும் தேர்தல் உறவு வைத்துக்கொள்ள கூடாது. இது அதிமுகவுக்கும் விடுக்கும் கோரிக்கை, இந்தியாவிற்கு பேராபத்து சூழ்ந்துள்ளது. மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளோம் என்கிற ஆணவத்தில் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். பாஜக கார்ப்பரேட்களுக்கானது. இந்துக்களுக்கானது அல்ல. அதானி – மோடி அமித்ஷாவின் பினாமி. கார்ப்பரேட்களுக்கு வேலை செய்யும் வேலைகாரர்கள் தான் மோடியும், அமித்ஷாவும், சனாதன் என்ற வடமொழிச் சொல்லுக்கு மாறாதது என்று பொருள். இது அறிவியலுக்கு முரணானது. எதுவும் மாறக்கூடியது என்று சொன்னால் அது தான் பௌத்தம், அது தான் மார்க்சியம்.

பாஜக ஆட்சி மாறும். மக்கள் அதை தூக்கி எறிவார்கள். அதற்கான கால எல்லை 2024.
பாஜக ஆட்சிக்கு பாடை கட்டக்கூடிய ஆண்டு 2024. ஆனால், சனாதனம் என்பது மாறாது.

பிறப்பால் பிரிக்கப்பட்ட யாரும் மாற முடியாது என்பதுதான் வர்ணம். மனு தர்மம் எங்கே உள்ளது என்று ஒருவர் கேட்கிறார். இந்திய சமூக கட்டமைப்பு 100 விழுக்காடு சனாதத்தின் மீது கட்டப்பட்டது.

சாதி மாறி திருமணம் செய்தால் ஆணவ கொலைகள் நடக்கின்றன? சமூக பழிக்கு அஞ்சி சொந்த பிள்ளையை கொலை செய்கிறாரகள். அவர்களை மன நோயாளிகளாக
ஆக்குகிறது சனாதனம்.

இந்தியாவை ஆள்வதில் 10% தான் அரசமைப்பு. மீதி 90% மனு தர்மம் தான் ஆள்கிறது.
சீட்டுக்காக திராவிட இயக்கங்கள் உடன் விசிக கை கோர்த்து நிற்பதாக சில
முட்டாள்கள் சொல்கிறார்கள். அது சமூக நீதிக்கான இயக்கம்.

சமூக நீதி தான் சனாதனத்தை உடைக்கும் சம்மட்டி, PFI அமைப்பை தடை செய்து
உள்ளீர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஏன் தடை செய்யவில்லை? அது என்ன ஜனநாயக
இயக்கமா? இந்தியாவில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தான் காரணம். சங் பரிவார் அமைப்புகள் எல்லோரும் வன்முறையில் ஈடுபடவில்லையா?

ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளை உடனே தடை செய்ய வேண்டும், இந்த
சனாதன சக்திகளுடன் தான் அதிமுக பாமக கூட்டணி வைத்துள்ளது, இவர்களை விரட்ட
கூடிய மகா கூட்டணி தான் திமுக கூட்டணி, மீண்டும் 2024 இல் பாஜக ஆட்சிக்கு
வந்தால் அவர்கள் புது அரசமைப்பை வெளியிடுவார்கள். எம்.ஜி.ஆரால், ஜெயலலிதாவால்
உருவாக்கப்பட்ட அதிமுகவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் எடப்பாடி
பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும்.

சனாதன சக்திகளை தனிமைப்படுத்த காங்கிரஸ் தனித்து பாஜகவை வீழ்த்தட்டும் என்று வேடிக்கை பார்க்க கூடாது. இது ஆபத்தான நேரம், இந்த முறை எக்காரணம் கொண்டும் பாஜக ஆட்சிக்கு வர கூடாது, அதிமுக, பாமக கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. சில தொகுதிகளுக்காக மக்களுக்கு துரோகத்தை செய்து விட கூடாது, ஜனநாயக சக்திகளை ஒன்றினைப்போம், சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம், ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றார் திருமாவளவன்.


source https://news7tamil.live/rss-should-be-banned-thirumavalavan.html