வெள்ளி, 23 செப்டம்பர், 2022

வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது-இரா.முத்தரசன்

 23 09 2022 வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.


புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட
அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை
சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் அது தவறல்ல, ஆனால்
நடைபெறக்கூடிய ஆட்சி நமது அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க கூடியதாகவும்
அரசியலமைப்புச் சட்டங்கள் உருவாக்கியுள்ள அமைப்புகளை பாதுகாக்க கூடிய
வகையிலும் அது இயங்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும் அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கியுள்ள அமைப்புகளை சீர்குலைக்கக் கூடிய வகையிலும் தற்போதைய ஒன்றிய அரசின் செயல்பாடு இருக்கிறது என்று நாங்கள் நினைக்கின்றோம்.

அதேபோன்று நமது நாடு மதச்சார்பின்மை என்ற மிகப்பெரிய கொள்கையை பின்பற்றி
வருகிறது. அந்தக் கொள்கை உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது, போற்றப்படுகிறது
வரவேற்கப்படுகிறது. மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக இன்றைய பாஜக அரசின்
அணுகுமுறை இருக்கின்றது.

குறிப்பாக பாஜகவின் மிக முக்கிய தலைவராக கருதப்படுகிற சுப்பிரமணியசாமி
சோஷியலிசமும் மதசார்பின்மையும் உள்ளிட்ட இரண்டு வார்த்தைகளையும்
அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்குக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியும் வழக்கு தொடர்ந்து உள்ளது. நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப் போகிறது
என்பதை இந்த வழக்கில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கக்கூடிய மதசார்பின்மை, சோசியலிசம்,
ஜனநாயகம் உள்ளிட்டவைகள் வார்த்தைகள் அல்ல. அது அரசியல் கட்சிகளாக பதிவு
செய்யக்கூடிய எந்த கட்சியினராக இருந்தாலும் மதச்சார்பின்மை சோசியல் எக்ஸாம்
ஜனநாயகம் என்கிற இவைகளுக்கு உட்பட்ட தான் இதனை ஏற்றுக்கொண்டு தான் அரசியல் கட்சிகளாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடியும். பாஜகவும் அப்படி தான் பதிவு செய்துள்ளது.

அப்படி இருக்கும் பொழுது சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் சொந்த
விருப்பத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்திருந்தால் ஏன்‌ பாஜக அவர் மீது
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது பாஜக சார்பில் அதன் ஒப்புதலோடு வழக்கு
அவர் தொடர்ந்து இருந்தால் ஏன் தேர்தல் ஆணையம் பாஜக மீது நடவடிக்கை
எடுக்கவில்லை என்று கேள்வி எழுகிறது.

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நல்ல கருத்துக்களை சொல்லக் கூடியவர்,
ஆற்றல் படைத்தவர். அவர் சொன்னது அவரின் சொந்தக் கருத்தில்லை, பெரியார் சொன்ன கருத்துக்களைவிட தமிழ்நாட்டில் வேறு யாரும் கருத்து சொல்லவில்லை. ஆனால் ஆ.ராசா  இந்து மதத்திற்கு விரோதமாக பேசினார் என்பதைப் போன்ற கருத்தை உருவாக்கி பாஜகவும் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அமைப்புகளும் தமிழகத்தில் ஒரு கலவரத்தை உண்டு செய்து வன்முறையை தூண்டும் அளவிற்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

கடையடைப்பு ஆர்ப்பாட்டம் அவர் பதவி விலக வேண்டும் அவரை பதிவு நீக்கம் செய்ய வேண்டும் என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒருவர் கருத்து கூறுகிறார் என்றால் அந்த கருத்தை மறுக்கலாம். அந்தக் கருத்து தவறு என்றால் ஆதரவு பூர்வமாக விளக்கம் அளிக்க உரிமை உண்டு. ஆனால் கருத்து விவாதம் நடத்துவதற்கு மாறாக வன்முறையை துண்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வது என்பது அனுமதிக்க முடியாத ஒன்று.

நாட்டில் ஆர்எஸ்எஸ் இயக்கம் செய்கின்ற வன்முறையை போல் யாரும் செய்யவில்லை.
ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று முதல் மதச்சார்பின்மையிலும்
ஜனநாயகத்திலும் அந்த அமைப்பிற்கு நம்பிக்கை கிடையாது. ஆர்எஸ்எஸ்-இன்
அடிப்படைக் கொள்கையே சர்வாதிகாரம் பாசிசம் தான். ஹிட்லர் பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றக் கூடிய அமைப்பு ஆர்எஸ்எஸ் அமைப்பு. அந்த அமைப்பு தடை செய்யப் வேண்டிய அமைப்பு. ஏற்கனவே தேசப்பிதா காந்தியை அந்த அமைப்பைச் சேர்ந்த கோட்சே சுட்டுக் கொண்டதற்காக அந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருந்தது.

பின்னர் இந்த தடை நீக்கப்பட்டது. அப்படிப்பட்ட அமைப்பு செய்கின்ற காரியங்கள் நாட்டில் ஏராளமாக நடைபெற்று வருகிறது. அவர்களைப் பற்றி யாரும் கவலைப்படாமல் ஒரு கருத்து சொன்னார் என்பதற்காக அச்சுருத்துவது கொலை மிரட்டல் விடுவது போன்ற செயல்கள் நல்லதல்ல. ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல. இப்படிப்பட்ட சம்பவங்களை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. ஆரம்பத்திலேயே கிள்ளி எரிவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


மத்திய அரசு புதுப்புது மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருகிறது. தொழிலாளர்
விதவைச் சட்டம் கல்விக் கொள்கை, மின்சார திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு
மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருகிறது. மத்திய அரசு நினைத்தால் யார்
அனுமதியும் இன்றி தானாக ஒரு சட்டத்தை நிறைவேற்றக்கூடிய அளவிற்கு அவர்களின்
பலம் உள்ளது. அதனால் மின்சார திருத்த சட்ட மசோதாவை வலுக்கட்டாயமாக திணிக்க
இணைக்கிறது.

இந்த மின்சார திருத்த சட்டம் நிறைவேற்றபட்டால் இந்தியா முழுவதும் பாதிப்பார்கள் என்பதை காட்டிலும் தமிழகம்‌ அதிகபட்சமாக பாதிக்கும். ஏனென்றால் விவசாயிகள் நெசவாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் பறிக்கப்படும். எண்ணெய் நிறுவனங்கள் எவ்வாறு கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ அதேபோல் மின்சாரம் கட்டணமும் அவர்களாகவே உயர்த்திக் கொள்ளும் நிலை ஏற்படும்.

ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வு ஜிஎஸ்டி வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு
நெருக்கடிகளுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். மேலும் மக்களை நெருக்கடியில்
தள்ளக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை எதிர்த்தும் மத்திய அரசு அது பின்பற்றுகிற தவறான சனாதான
கொள்கை முறியடிக்கப்படவும் நாட்டிலுள்ள இடதுசாரிகள் மட்டுமின்றி ஜனநாயக
சக்திகள் மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கை உடையவர்கள். இவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் நிலங்களில்
என்ஐஏ சோதனை நடைபெற்றுள்ளது. இந்தச் சோதனையில் ஆவணங்கள் எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் என்ன மாதிரியான ஆவணங்கள் எடுக்கப்பட்டது என்று இதுவரை சொல்லவில்லை.

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறியுள்ளனர். ஏற்கனவே பல
செய்திகளில் பாஜக மாவட்ட தலைவர்கள் அவர்களே அவர்களின் கார்களை கொளுத்துவது வழக்கு கொடுப்பது என பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.‌ இந்நிலையில் தற்போது பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறுகின்றனர். அது யார் வீசினார்கள் என்பது கண்டுபிடிப்பது தற்போதுள்ள நவீன காலத்தில் சிரமமானது இல்லை. யார் வீசினாலும் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்முறையை யார் மேற்கொண்டாலும்‌ வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது. பாஜகவாக இருந்தாலும் எந்த அரசியல் கட்சியினராக
இருந்தாலும் அனுமதிக்க முடியாது. வன்முறைக்கு நாட்டில் இடம் கிடையாது. ஆனால்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட அவர்கள் வன்முறையை ஆதரிக்கின்றனர். அமைச்சர் காரின் மீது செருப்பு வீசியதை நியாயப்படுத்தி அண்ணாமலை பேசினார் என்று முத்தரசன் தெரிவித்தார்.

source https://news7tamil.live/anyone-who-speaks-in-a-way-that-incites-violence-cannot-be-allowed-ira-mutharasan.html