வெள்ளி, 23 செப்டம்பர், 2022

காஞ்சிபுரம் அருகே அகழாய்வு; தங்கம், சுடுமண் காதணிகள் கண்டுபிடிப்பு

 

காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு ஊராட்சியில் தொல்லியல் துறை அகழாய்வில் தங்கம் மற்றும் சுடுமண் காதணிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழாய்வு பணி துவங்கியது. கடந்த 3 மாதங்களாக நடைபெறும் இந்த அகழாய்வில் இடை கற்காலம், வரலாற்று தொடக்க காலம் மற்றும் வரலாற்று கால தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டது.

அகழாய்வு தொடங்கிய பகுதியில், வரலாற்று கால 3 செங்கல் சுவர்கள் பல்வேறு வரலாற்று எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அகழாய்வு பணி தொல்லியல் மேட்டின் தென்கிழக்கு பகுதியில் சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இதில் கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் மற்றும் ரோமானிய ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  மேலும், ஒன்றரை கிராம் அளவில் தங்கத்தால் ஆன அணிகலன்கள் 2 கிடைத்துள்ளது. இது தவிர கண்ணாடி அணிகலன்கள் சுடுமண் பொம்மைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு பொருட்களும் கிடைத்துள்ளது.

இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், சுடுமண் காதணிகள் , தங்க அணிகலன்கள், சுடுமண் வட்ட சில்லுகள் , இரும்பு பொருட்கள் மற்றும் வளையல் துண்டுகள் போன்ற தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

மேலும், இவை 4,000 ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன் வரலாற்று கால எச்சங்களை தொடர்ந்து இடை கற்காலத்தை சேர்ந்த கருவிகளான கிழிப்பான், மற்றும் அம்பு முனைகள் கிடைத்துள்ளன என்றும் அகழாய்வு பணி தொடர்ந்து நடைபெறுவதால் பல்வேறு சான்றுகள் கண்டறிய வாய்ப்புள்ளதாகவும் கூறினர்.


source https://news7tamil.live/gold-and-historical-evidence-in-archaeological-excavations.html