திங்கள், 26 செப்டம்பர், 2022

ஈரோடு கடை எரிக்க முயற்சி: எஸ்.டி.பி.ஐ நிர்வாகி உள்பட 4 பேர் கைது

 25 09 2022

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஈரோடு டீசல் பாக்கெட் வீச்சு சம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த 22-ம் தேதி  மேற்கு மண்டலத்தில் 9 இடத்தில் வாகனம் மற்றும் கடைகளை சேதப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.

பொள்ளாச்சியில் 5 சம்பவமும்  மேட்டுப்பாளையத்தில் 2 சம்பவமும், ஈரோடு 1, புளியம்பட்டி 1 என ஒன்பது இடங்களில் எரிபொருள் வீச்சு சம்பவம் நடைபெற்றது.

ஈரோடு பா.ஜ.க இளைஞர் அணி பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் கடையில் டீசல் பாக்கெட்களை வீசி எரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகி சதாம் உசேன் 25 கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தில் தொடர்புடைய அவரின் நண்பர்கள் ஆசிக் 23, கலீல் ரகுமான் 28, ஜாபர் 27 ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் குற்றத்திற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளோம்.

ஒட்டுமொத்தமாக திட்டம் தீட்டி சம்பவம் நடைபெறுகிறதா? அல்லது தனிப்பட்ட விதமாக நடைபெறுகிறதா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. சி.சி.டி.வி, சி.டி.ஆர் அனலைஸ், மற்றும் வாகன தணிக்கை மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஒரே நபர்கள் தான். விரைவில் கைது செய்யப்படுவார்கள். தவறு செய்தவர்கள் மாட்டுவார்கள். தற்போது சூழலை மாற்றியுள்ளோம். சம்பவம் அன்று ஒரு இரவு தான் நடந்தது. தற்போது கைது நடவடிக்கை தொடங்கிவிட்டது.

கோவை மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். திருப்பூரில் ஆயிரம் போலீசார், ஈரோட்டில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை


source https://tamil.indianexpress.com/tamilnadu/erode-police-arrest-4-person-including-sdpi-member-for-petrol-bomb-case-516104/