திங்கள், 26 செப்டம்பர், 2022

கோவை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் – இருவர் கைது

 25 09 2022

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், நகரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

காவல் ஆணையர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, கோவை மாநகரில் நடைபெற்ற சம்பவங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்து வந்தார்கள்.

கடந்த 23-ம் தேதி மதியம் குனியமுத்தூர் பகுதியில் ரகு என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் எரிபொருள் ஊற்றி பற்ற வைக்கப்பட்டது.

அதேபோல அதே நாள் காலை 11 மணியளவில் குனியமுத்தூர் பகுதியில் பாஜக பிரமுகர் பரத் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் வழக்கு பதிவு செய்தோம்.

இந்த வழக்குகளில் முதல் சம்பவத்திற்கு இந்திய தண்டனைச் சட்டம் 435, வெடி மருந்து வழக்கு, இரு சமூகத்திற்கு பிளவு ஏற்படுத்துவது போன்ற பிரிவுகளில் பதிவு செய்தோம்.

அடுத்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 436, வெடி மருந்து வழக்கு, இரு சமூகத்தினருக்கிடையே பிளவு ஏற்படுத்துவது போன்ற வழக்குகளை பதிவு செய்தோம்.

இந்த ஒவ்வொரு வழக்கிலும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு நுண்ணறிவு சேகரித்தும், சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வின் மூலமும் புலன் விசாரணை செய்தோம்.

இதில் இன்று 4.30 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ்(34), குனியமுத்தூரை சேர்ந்த இலியாஸ்(34) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இரண்டு நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள்.  இவர்களை குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் கைது செய்துள்ளார். இவர்கள் இருவரும் எஸ்.டி.பி ஐ நிர்வாகிகளாக உள்ளனர். இவர்கள் இன்று விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவர்.

கோவை நகரில் இதுபோன்ற ஆறு வழக்குகளிலும், ஒரு பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கும் உள்ளது. மேலும் மீதி உள்ள வழக்குகளிலும் முன்னேற்றம் உள்ளது. மற்ற குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க பல்வேறு படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு மதங்களைச் சார்ந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பேசி உள்ளோம். அனைவரும் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். கோவை மாநகரில் பதற்றம் ஏதுமில்லை அமைதியாக உள்ளது. கூடிய விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, ஒப்பணக்கார வீதியில் நடந்த சம்பவம் தொடர்பான வழக்குகளில் மிகவும் முன்னேற்றம் உள்ளது. இந்த இரண்டு வழக்கின் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். அதேபோல மீதி வழக்குகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொழுது தான் இந்த சம்பவங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதா என்பது தெரியவரும்.

பா.ஜ.க ஆர்ப்பாட்டம் தொடர்பாக மனு அளித்துள்ளனர். அது தொடர்பாக முடிவெடுத்து வருகிறோம்.

இரவில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என  கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை


source https://tamil.indianexpress.com/tamilnadu/kovai-commissioner-says-two-arrested-for-petrol-bomb-incidents-516079/