சனி, 25 ஏப்ரல், 2026

திருத்தப்பட வேண்டிய முஸ்லிம் சமூகம்!

 திருத்தப்பட வேண்டிய முஸ்லிம் சமூகம்!

25 04 2026


உல்லாச வாழ்க்கையில் ஊறிக்கிடந்த சினிமா நடிகர் விஜய்க்கு பதவி ஆசை காட்டி அவரை பாஜகதான் களத்திற்கு கொண்டு வந்தது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.


பாஜகவிற்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணிக்குச் செல்லும் வாக்குகளைத் தனியாகப் பிரித்து அதன் மூலம் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பை அதிகரிப்பது மட்டும்தான் இதன் நோக்கமாக இருக்கிறது.


ஏற்கனவே நடிகர் ரஜினியை அரசியலுக்குக் கொண்டு வந்து அதன் மூலம் வாக்குப்பிரிப்பு வேலையைச் செய்வதற்கு பெரு முயற்சி எடுத்து தோல்வி அடைந்த பாஜக விஜய் விஷயத்தில் கவனமாக செயல்பட்டு அவரை களத்தில் இறக்கி விட்டது.


நடிகர் விஜய்யை பாஜகதான் களமிறக்கியுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தும் கூட பல இஸ்லாமியர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.


இஸ்லாமியப் பெண்கள், குறிப்பாக இஸ்லாமிய இளம்பெண்கள் எது எப்படிப் போனாலும் பரவாயில்லை நாங்கள் விஜய்யைத்தான் ஆதரிப்போம் என்று சொல்வதைக் காண முடிகிறது.


எக்ஸாம் போனாலும் பரவாயில்லை நான் விஜய்யைப் பார்க்க வந்தேன் என்று பர்தா அணிந்த பெண்கள் சொல்வதும், விஜய்யைப் பார்த்துவிட்டு கண்ணீர் வடித்து அழுவதும், துள்ளிக் குதித்து ஆடுவதும், இன்னும் சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு நான் பல காலமாக நடிகர் விஜய்யின் ரசிகர் என்று சொல்வதும், ஒருசில இஸ்லாமியப் பெண்கள் எங்கள் கணவனை விட விஜய்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும், அது அவருக்கும் தெரியும் என்று சொல்வதும், நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு உலமாக்கள் அணி அமைக்கப்பட்டதும் இந்த சமுதாயம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று கேள்வி எழுப்ப வைத்துள்ளது.


திருக்குர்ஆனும், ஹதீஸும் மட்டும்தான் நேர்வழி தரக்கூடியது என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சினிமா கூத்தாடியின் பின்னால் சென்று கொண்டிருக்கும் சமூகத்தை யார் நேர்வழிக்கு கொண்டு வருவது? நடிகர் விஜய்யை பாஜகதான் களமிறக்கியுள்ளது என்று சொன்னால் அதனால் என்ன தவறு? என்று விஜய் ஆதரவு இஸ்லாமியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் .


விஜய் வெற்றி பெற்றால் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பார் என்று சொன்னால், அதனால் என்ன பிரச்சினை? என்று கேட்கிறார்கள்.


இஸ்லாமியர்களை விஜய் பல சினிமாக்களில் தீவிரவாதியாகக் காட்டி குத்திக் குதறியுள்ளார். கடைசியாக அவர் நடித்த ஜனநாயகன் படத்தில் முஸ்லிம்களை மிக பயங்கரவாதிகளாக காட்டியுள்ளாரே! என்று விஜய்யை ஆதரிக்கும் முஸ்லிம்களிடம் கேள்வி எழுப்பினால், இதற்கு முன்னால் முஸ்லிம்களை யாரும் பயங்கரவாதிகளாக சினிமாவில் காட்டவில்லையா? விஜய்யை மட்டும் ஏன் குற்றம் சொல்கிறீர்கள்? என்று உயிரோடும், உணர்வோடும் விஜய்யை நினைத்து சில பெயர் தாங்கி இஸ்லாமியர்கள் ஆட்டம் போடுவதைக் காண முடிகின்றது.


இந்த கொடூரத்தைப் பார்த்து கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை.


இந்த கூமுட்டை கூட்டத்திற்காகவா வெயிலிலும், மழையிலும் கிடையாய்க் கிடந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடினோம்? இந்த கூமுட்டைக் கோமாளிகளுக்கும் சேர்த்துத்தானே குடியுரிமை கேட்டுப் போராடினோம்? ஆனால் நம் போராட்டங்களின் வீரியத்தை அடியோடு உடைக்கும் அளவிற்கு இந்த பெயர் தாங்கிகளின் செயல் அமைந்திருக்கிறதே!.


ஒரு சினிமா கூத்தாடிக்காக சமுதாயத்தை அடகு வைத்துவிட்டு மார்க்கத்தை பணயமாக்கிவிட்டு பாதை மாறி நடந்து கொண்டிருக்கும் இந்த பெயர் தாங்கி இஸ்லாமியர்களை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை?


இன்னும் சில முஸ்லிம்கள் பல தொகுதிகளில் நாதக, தவெக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்களிக்க பிறரையும் வலியுறுத்தியுள்ளார்கள்.


நம்ம சமுதாய வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று அவர்கள் வாக்கு சேகரித்ததையும் பார்க்க முடிந்தது. ஆனால் கடைசிவரை அதற்குள் இருக்கும் அரசியல் சூட்சமத்தை மக்கள் புரிந்து கொள்ளவே இல்லை.


முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி அதன் மூலம் திமுகவிற்குச் செல்லும் இஸ்லாமிய சமூகத்தின் வாக்குகளை உடைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் போன்றவர்கள் முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார்கள்.


இஸ்லாமிய வேட்பாளர்கள் தவிர்த்து அவர்களுக்கு முஸ்லிம்கள் மீது எவ்விதமான அக்கறையும் கிடையாது. அவர்களுடைய நோக்கம் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பை தேடித் தர வேண்டும் என்பது மட்டும்தான்.


இப்படியாக கண்மூடித்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கும் ஒருசில பெயர்தாங்கி இஸ்லாமியர்கள் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை .


இது போன்ற சமுதாய பொறுப்பற்ற பெயர் தாங்கிகள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சமுதாயமும் பல நேரங்களில் தலை குனிந்திருப்பதையும் இங்கே நினைவு படுத்த வேண்டியுள்ளது.


இவர்களைப் போன்ற தற்குறிகளை அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர்த்து இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவராக எந்த நிலையிலும் பார்க்கக் கூடாது.


இதுபோல சரியான பாதை தெரியாமல் சினிமா கூத்தாடிக்குப் பின்னால் சென்று இம்மையையும், மறுமையையும் இழந்து கொண்டிருக்கும் இந்த இஸ்லாமிய இளம் பெண்களுக்கும், ஆண்களுக்கும் சரியான மார்க்கத்தை மீண்டும் மீண்டும் போதிக்க வேண்டியது சமூகத்தின் கடமை என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள வேண்டியுள்ளது.