வேலூரில் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அதில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்தது.
அதனால், தொகுதி மக்களும், கட்சி தொண்டர்களும் என்னை குற்றவாளியாக பார்த்தார்கள். எந்த ஒரு சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கும் யாரும் என்னை அழைக்காததால், நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
சசிகலா குடும்பத்தினர் நடத்திய அனைத்து நாடகங்களும், தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதனால் சசிகலாவிடம், எங்கள் மாவட்டத்தில் உள்ள மக்களும், தொண்டர்களும் உங்களை ஏற்க தயாராக இல்லை என்று தைரியமாக கூறினேன்.
அமைச்சர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சசிகலா குடும்பத்தை விரட்ட வேண்டும் என்று திட்டமிட்டோம். தற்போது குடும்ப அரசியலை அதிமுகவில் இருந்து விரட்டியுள்ளோம்.
சசிகலாவின் ஒரு குடும்பத்திற்காக, நாங்கள் ஆட்சியை இழக்க விரும்பவில்லை. அதனால் தான் அந்த குடும்பத்தை நாங்கள் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தோம்.
கட்சியில் பிளவு என்பதே இல்லை. இது அண்ணன், தம்பி சண்டை போன்றது. ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 10 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம்.
இனிவரும் காலங்களில் இரு அணிகளும் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவது குறித்து முடிவு எடுப்போம். நாங்கள் ஒன்றிணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம். இவ்வாறு அவர் பேசினார்.