செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

உச்சநீதிமன்றத்தில் மலையாள நடிகை பிரியா வாரியர் மனுதாக்கல் February 20, 2018

இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் பாடல்வரிகளில் நடித்ததாகக் கூறி தன்மீது போடப்பட்டுள்ள வழக்குப்பதிவுகளை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மலையாள நடிகை பிரியா வாரியர் மனுதாக்கல் செய்துள்ளார். 

‘ஒரு அதார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘‘மாணிக்ய மலராய பூவி’’ பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் பிரியா வாரியரின் கண் அசைவுகள் இணையத்தில் வைரலானதுடன், இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்தது. எனினும், அப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி பிரியா வாரியர், படத்தின் இயக்குனர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் தன் மீதான வழக்குப்பதிவுகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரியா வாரியார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அந்த பாடலில் இடம்பெற்ற குறிப்பிட்ட வரிகள் கடந்த 40 ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருவதாகவும் தற்போது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, தன் மீதான சுமத்தப்பட்டுள்ள வழக்குப்பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் ப்ரியா வாரியர் கேட்டுக்கொண்டுள்ளார்.