ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழக கல்வித்திட்டத்தில் மாற்றம்: செங்கோட்டையன் February 18, 2018

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு படித்தாலே வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 125வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் மேலும் 312 அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை 412 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், தமிழக கல்வித் திட்டம் மாற்றப்படும் என்றும், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கும் மேலான, தரமான கல்வித் திட்டமாக உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

இனி வரும் காலங்களில் பிளஸ் 2 படித்தாலே வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற அளவுக்கு பாடத்திட்டங்கள் இருக்கும் எனவும் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார். 

பெற்றோர் மற்றும் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், ‘14417’ என்ற இலவச எண் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.