ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

இந்தியா - ஈரான் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! February 18, 2018

Image
டெல்லியில் பிரதமர் மோடியை, ஈரான் அதிபர் ரூகானி சந்தித்துப்பேசினார். இதனைத்தொடர்ந்து, இருநாடுகள் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஐ.நா.பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

அரசுமுறைப்பயணமாக டெல்லி வந்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ரௌகனி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப்பேசினார். வர்த்தகம், முதலீடு, எரிவாயு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் மேம்பாடு குறித்து இருவரும் விவாதித்தனர். பின்னர்  மோடியும், ரௌகனியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  

அண்டை நாடான ஆஃப்கன் அமைதியான, பாதுகாப்பான, ஸ்திரத்தன்மையுள்ள நாடாக விளங்க, இந்தியாவும், ஈரானும் விரும்புவதாக குறிப்பிட்டார். பின்னர் பேசிய ஈரான் அதிபர் ரௌகனி, வர்த்தகம், வியாபாரத்தை தாண்டி, இந்தியாவுடனான ஈரானின் உறவு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என,  குறிப்பிட்டார். 

இந்தியா அமைதியை விரும்பும் நாடு என புகழராம் சூட்டிய ரௌகனி, 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு, ஐ.நா.சபையில், ஏன் வீட்டோ அதிகாரம் வழங்கக்ககூடாது என்றும் வினவினார்.

இந்தியா - ஈரான் இடையே இரட்டை வரிவிதிப்பு முறை ரத்து, விவசாயத்துறையில் ஒத்துழைப்பு, மருத்துவம், கைதிகள் பரிமாற்றம் உட்பட 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

சாபகர் துறைமுகம்:

சாபகர் துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு குத்தகைக்கு விடும் ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது. 

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ள நிலையில், 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஈரானின் சாபகர் துறைமுகத்தை இந்தியா வசப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சாபகர் துறைமுகமானது மத்திய ஆசிய நாடுகளை இணைக்கும் முக்கிய துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் ஈரான் அதிபர் ஒருவர் இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறை என்பதும் முக்கியமானதாகும்.