செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

டெல்லி அரசின் தலைமை செயலாளர் மீது ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தாக்குதல்? February 20, 2018




Image
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இருவர் தன்னை தாக்கியதாக டெல்லி அரசின் தலைமை செயலாளர் அன்சு பிரகாஷ் குற்றம்சாட்டியுள்ளார். 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான அஜய் தத் மற்றும் பிரகாஷ் ஜகர்வால் ஆகியோர் தன்னை தாக்கியதாக துணை நிலை ஆளுநரிடம் டெல்லி தலைமை செயலாளர் அன்சு பிரகாஷ் புகார் அளித்துள்ளார். 

இந்த குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது போன்ற ஒரு சம்பவமே நடைபெறவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர், எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு தான் பதிலளிக்கத் தேவையில்லை எனவும், துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே பதிலளிக்க முடியும் என்றும் தலைமை செயலாளர் அன்சு பிரகாஷ் கூறியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, எம்.எல்.ஏ.க்களை கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பியதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் டெல்லி ஐஏஎஸ் சங்கத்தில் இந்த புகார் தொடர்பாக இன்று விவாதிக்கப்பட இருக்கிறது. காவல்நிலையத்தில் புகார் அளிப்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.