செவ்வாய், 31 ஜனவரி, 2023

சேலத்தில் தலித் இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க பிரமுகர் அதிரடி கைது

 31 1 2023

சேலத்தில் தலித் இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க பிரமுகர் அதிரடி கைது

சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே திருமலைகிரி கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், கும்பாபிஷேகம் முடிவுற்று, மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2, 3 நாட்களுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த, அந்த ஊராட்சியின் தலைவரும், தி.மு.க சேலம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மாணிக்கம், கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞர் மற்றும் அவரது தந்தையை கிராம மக்கள் முன்னிலையில் நிற்க வைத்து, கடுமையாக திட்டியுள்ளார். வார்த்தைக்கு வார்த்தை ஆபாச சொற்களால் காது கூசும் அளவிற்கு இளைஞரை ஊர் மக்கள் மத்தியில் மாணிக்கம் திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.

வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதையடுத்து, தி.மு.க தலைமை உடனடியாக மாணிக்கத்தை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிக்கம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, மாணிக்கத்தை தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கூறி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் மாணிக்கத்தின் மீது புகார் கொடுத்ததன் பேரில், அவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணிக்கத்தை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளளனர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-panchayat-president-arrested-for-abusing-dalit-youth-in-salem-585243/