ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

100 ஆண்டுகளில் ஏன் பெண் தலைவரே இல்லை? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

 24 09 2023 

மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக விரும்பவில்லை என்றும், தேர்தலை கருத்தில் கொண்டுதான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு வர கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “காங்கிரஸ் ஆட்சியின்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது பாஜக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அன்று அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் போனது.

இன்று அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், பாஜகவினர் கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். அவர்களுக்கு தெளிவான நோக்கமோ, கொள்கையோ கிடையாது. அந்த மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ள நிலையில், அது 2030-ஆம் ஆண்டுதான் அமல்படுத்தப்படும். 10 ஆண்டுகளில் மோடியோ, அவருடன் உள்ள மற்றவர்களோ இருக்க மாட்டார்கள்.

மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்தாலும், நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு மசோதாவில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது. அடுத்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

இதையும் படியுங்கள் : அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியபோது, அந்த நிகழ்ச்சிக்கு அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. அதற்குக் காரணம் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், தீண்டத்தகாதவர் என்பதால்.

அதேபோல அந்தக் கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. குடியரசுத் தலைவரால்தான் மக்களவை கூட்டப்படுகிறது. பிரதமரால் அல்ல. ஆனால் குடியரசுத் தலைவரை புறக்கணித்துவிட்டு, பெண்களை பெரிதும் மதிப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

எதற்காக தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது? உண்மையில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவராக சரோஜினி நாயுடு இருந்தார். ஆனால் 100 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளாரா? அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டுதான், மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.


source https://news7tamil.live/in-100-years-why-has-rss-and-bjp-never-had-a-woman-leader-mallikarjuna-karke-question.html