வெள்ளி, 29 செப்டம்பர், 2023

வழக்கின் தீர்ப்பை மாற்ற வேண்டும் என தொடர் மிரட்டல் : பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை நீதிபதி!

 

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பை மாற்றுமாறு கொடுத்த தொடர் அழுத்தம் மற்றும் மிரட்டல் காரணமாக இலங்கை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார்.

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டு வந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதி பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பை மாற்றுமாறு தொடர்ச்சியாக அரசு தரப்பால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்ற வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தனர்.

அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வு துறையினர் தொடர்ச்சியாக என்னை கண்காணித்து வந்தனர்.
சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் கடந்த 21ஆம் தேதி சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்ற உத்தரவுகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் கொடுத்தார்.

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புப்படுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதி பதவியை  துறந்துள்ளேன்.

இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று அவர்  தெரிவித்தார்.  தன்னுடைய பதவி விலகலை அறிவித்த பின்னர் அவர்  நாட்டை விட்டு வெளியேறியுள்ளது தெரியவந்துள்ளது.

source https://news7tamil.live/intimidation-to-change-the-judgment-of-the-case-sri-lankan-mullaitivu-district-judge-who-resigned-and-left-the-country.html