புதன், 20 செப்டம்பர், 2023

தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை..!

 20 09 2023

தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வருமான வரித்துறை அவ்வபோது சோதனை நடத்தி வருவது வழக்கமான ஒன்று . அந்த வகையில் சென்னையில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் TNEB-க்கு கன்வேயர் பெல்ட் மற்றும் பிற உபகரணங்களை வழங்கும் தொடர்புடைய நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், இடைத்தரகர்கள் ஆகியோருடன் தொடர்புடைய சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு படூர் பகுதி,  சென்னை எம்ஜிஆர் நகர் சப்தகிரி காலனியில் உள்ள தனியார் நிறுவனம், சென்னை திநகர் பார்த்தசாரதிபுரம் பகுதியில் உள்ள BHANDARi நிறுவனத்தில் போன்றவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.


source https://news7tamil.live/the-income-tax-department-conducted-a-surprise-raid-at-more-than-40-places-in-tamil-nadu.html