திங்கள், 25 செப்டம்பர், 2023

தமிழ்நாட்டில் டெபாசிட் கூட வாங்க தகுதியற்ற கட்சி என நிரூபிப்போம்!”

 24/09/2023

”பாஜக தமிழ்நாட்டில் டெபாசிட் கூட வாங்க தகுதியற்ற கட்சி என நிரூபிப்போம். மத்தியிலும் அக்கட்சி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வராது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் படியூர் பகுதியில் நடைபெற்ற திமுக கொங்கு மண்டல பூத் முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன் , பொன்முடி, கே.என் நேரு, முத்துசாமி, மதியழகன், ராமச்சந்திரன், மு.பெ சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:

இந்திய நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறோம். திராவிட இயக்கம் கருவான ஊர் திருப்பூர். பெரியார் அண்ணா சந்தித்த ஊர் திருப்பூர். இந்தியை எதிர்த்தும் , தமிழை காக்கவும் போராட்டம் நடந்த போது பள்ளி மாணவர்கள் அதிகம் கலந்துகொண்ட ஊர் திருப்பூர்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்தான் வாக்காளர்களுக்கு பொறுப்பு. 40ம் நமது என சொல்வது உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் தான். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு , வாக்காளர்களை சந்தித்து சாதனைகளை பிரச்சாரம் செய்ய வேண்டும், வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்காளரின் குடும்ப அங்கத்தினராக மாற வேண்டும். தினமும் 1 மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்க வேண்டும்.

வாக்குச்சாவடி முகவர் பிரச்சினையை என்னிடம் நேரிடையாக சொல்லுங்கள். நம்மை நிராகரிப்பவர்கள் யாரும் இல்லை. மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறோம். 1 கோடிக்கும் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகையினை வழங்கியிருக்கிறோம். செப் 15 ஆம் தேதிக்கு முன் இருந்த வரவேற்பு இப்போது அதிகமாயிருக்கிறது.

முதியோர் உதவித்தொகையை உயர்த்தியிருக்கிறோம். காலை உணவுத்திட்டம் , நான் முதல்வன் திறன் மேம்பாட்டு திட்டம், புதுமைப்பெண் திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பமும் பயனடைகிறது.

மத்தியில் உள்ள ஆட்சி 3 வது முறையாக வரக்கூடாது . 10 ஆண்டில் சொன்னது எதையும் செய்யவில்லை. கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் தருவேன் என்றார்கள் தந்தார்களா? ஆனால் நாம் மகளிருக்கு 1000 நாம் தருகிறோம். வேலைவாய்ப்பு தருவதாக சொன்னார்கள், ஆனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதை கேட்டால் பக்கோடா விற்க சொல்கிறார்கள்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையில் டாலர் சிட்டி திருப்பூர் டல் சிட்டியாகிவிட்டது. மான்செஸ்டர் கோவை திறனற்ற நிலையாக தள்ளப்பட்டது. திமுக ஆட்சி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். மத்திய அரசு சேலம் உருக்காலையை நவீனபடுத்துவதாக சொன்னார்கள். ஈரோட்டில் ஜவுளி உட்கட்டமைப்பு வசதி , என டிசைன் டிசைனா கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?

ஆண்டுக்கு ஒரு நாடு ஜி 20 மாநாடு நடத்தும். இது பாஜக சாதனை அல்ல. சந்திரயான் நேரு துவங்கி சந்திரயான் விஞ்ஞானிகள் செய்த சாதனை. சந்திரயான் 3 பாஜக சாதனை அல்ல. பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு உடனடியாக வழங்காமல் 2029ல் வழங்குவார்கள். பாஜக தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்க தகுதியற்ற கட்சி என நிரூபிப்போம். அதனை உணர்ந்து அதிமுகவுடன் கூட்டணி, சண்டை போல நடித்துகொண்டிருக்கிறார்கள்.

பாஜக சொன்னால் தோப்புகாரணம் போடும் கட்சி அதிமுக. ஊழல் குற்றச்சாட்டில் காப்பாற்ற கோரி தனியாக சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். சென்னையில் இருந்து சென்றால் தெரிந்துவிடும் என அதிமுக நிர்வாகிகள் கொச்சி வழியாக சென்று பாஜகவினரை சந்திக்கும் ரகசியம் என்ன?

பழனிசாமி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவளிக்கிறார். அதிமுகவிற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலை போன்று பாடம் கற்பிக்க வேண்டும்.


source https://news7tamil.live/we-will-prove-that-bjp-is-not-a-party-worthy-of-even-taking-deposits-in-tamil-nadu-speech-by-chief-minister-m-k-stalin.html