வியாழன், 31 மார்ச், 2016

பேஸ்புக் வருமானம் வளர சம்பளமே வாங்காமல் நாம் உழைக்கிறோமா?


SDஐதராபாத், மார்ச் 30-

உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேஸ்புக் பயனாளிகள் சம்பளமே வாங்காமல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பர்க்-கின் பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற சைபர் ஸ்பேஸ் பாதுகாப்பு மாநாட்டில் இந்திய ராணுவத்தின் மின்னணுவியல் துறை நிபுணராக பணியாற்றி ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஏ.வி.சுப்பிரமணியன் பேசியதாவது:-

நாம் அனைவரும் நம்மை பேஸ்புக் பயனாளிகளாக கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நீங்கள் அனைவருமே பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பர்க்-கின் தயாரிப்பு பொருட்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் பேஸ்புக் மூலமாக பகிரும் தகவல்களை மையமாக வைத்து, உங்களை பயன்படுத்தி, உங்கள் தகவல்களை எல்லாம் அவர் விற்று விடுகிறார்.

பாரபட்சம் பாராமல் மிகமிக முக்கியமான தகவல்களையும் நாம் பேஸ்புக்கில் பதிவு செய்கிறோம். அவற்றை பதிவிடுவதோடு மட்டுமில்லாமல், அந்த செய்திகளின் ‘லைக்’, ‘டிஸ்லைக்’ மற்றும் ‘ஷேர்’ எண்ணிக்கை தொடர்பாக நாம் அதீத ஆர்வமும் காட்டுகிறோம். இதன்மூலம், பேஸ்புக்கில் உங்களுக்கு ஒரு கணக்கு கிடைக்கின்றது. ஜுகர்பர்க்கின் வங்கிக் கணக்கில் டாலர்களாக குவிகின்றது. 

இதன்மூலம், நாம் மார்க் ஜுகர்பர்க்கின் விளம்பர வருமானத்தை பெருக்கி வருகிறோம். ஒருவகையில், மார்க் ஜுகர்பர்க்கின் தயாரிப்பு பொருள்களாக நீங்கள் மாறிவிடுகிறீர்கள். உங்களைப்போலவே பேஸ்புக் பயனாளிகளாக இருக்கும் சுமார் 150 கோடி மக்கள், பேஸ்புக் நிறுவனத்திடம் சம்பளம் வாங்காத இலவச பணியாளர்களாக வேலைசெய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.